Published : 30 Aug 2023 07:01 AM
Last Updated : 30 Aug 2023 07:01 AM

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம்

கீதிகா ஸ்ரீவஸ்தவா

புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் திலுள்ள இந்திய தூதரகத்தின் தலைமைப் பொறுப்பில் டாக்டர் எம். சுரேஷ் குமார் உள்ளார். இந்நிலையில் அந்த பொறுப்புக்கு கீதிகா நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து எம். சுரேஷ் குமார் விரைவில் டெல்லி திரும்பவுள்ளார்.

தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் (எம்இஏ) இணைச் செயலாளராக பணியாற்றி வரும், கீதிகா ஸ்ரீவஸ்தவா விரைவில் புதிய பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ம்ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சிறப்புப் பிரிவை இந்திய அரசு நீக்கியது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானில் உள்ள தூதரகங்கள் தூதர்கள் இல்லாமலேயே செயல்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து தூதரகங்கள் அங்குள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தலைமையில் இயங்கி வருகின்றன. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் இஸ்லாமாபாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தில் பாகிஸ்தானுக்கான கடைசி இந்தியத் தூதராக அஜய் பிசாரியா இருந்தார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதும் அவர் நாட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார்.

முதல் பெண் அதிகாரி: 1947-ம் ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த அதிகாரி  பிரகாசா பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்தியத் தூதராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் பாகிஸ்தானில் இந்தியத் தூதர்களாக 22 பேர் பொறுப்பேற்று பணியாற்றி உள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதரகத்தின் தலைமைப் பொறுப்பில் பெண் அதிகாரி கீதிகா ஸ்ரீவஸ்தவா முதல் முறையாக பொறுப்பேற்கவுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x