Published : 30 Dec 2017 05:10 PM
Last Updated : 30 Dec 2017 05:10 PM
டெல்லியில் உள்ள நிஸாமுதீன் தர்க்கா உருஸ் விழாவில் பங்கேற்பதற்கு விசா வழங்க, இந்திய அரசு மறுத்து வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் உள்ள ஹஸ்ரத்துல் குவாஜா நிஸாமுதீன் அவுலியா தர்காவில் வரும் ஜனவிர 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழாவில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம்.
இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க திட்டமிட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த 192 பேருக்கு விசா வழங்க இந்தியா மறுத்து வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இருநாடுளைச் சேர்ந்தவர்களும் புனித யாத்திரை மேற்கொள்ள, விசா உள்ளிட்ட போதுமான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என, 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ள இந்திய மறுத்து வருகிறது. டெல்லியில் உள்ள ஹஸ்ரத்துல் குவாஜா நிஸாமுதீன் அவுலியா தர்கா உருஸ் விழாவில் பங்கேற்க விசா வழங்கக் கோரி பாகிஸ்தானைச் சேர்ந்த 192 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
இது, மனிதநேயம் மற்றும் மத உரிமையை மீறும் செயல். குரு அர்ஜூன் தேவ் தியாக தின விழாவில் சீக்கியர்கள் பங்கேற்க, சிறப்பு ரயிலை இயக்க பாகிஸ்தான் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்திய அரசு, போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. மீண்டும் இதுபோலவே மத விழாக்களில் பங்கேற்கவிடாமல் இந்திய அரசு செயல்படுகிறது இந்த போக்கை கைவிட்டு, பாகிஸ்தானில் இருந்து டெல்லி உருஸ் விழாவில் பங்கேற்க இந்தியா விசா வழங்க வேண்டும்'' எனக் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT