நடுவானில் நெஞ்சு வலியால் விமானி உயிரிழப்பு: 271 பயணிகளுடன் பனாமாவில் தரையிறக்கப்பட்ட விமானம்

நடுவானில் நெஞ்சு வலியால் விமானி உயிரிழப்பு: 271 பயணிகளுடன் பனாமாவில் தரையிறக்கப்பட்ட விமானம்

Published on

பனாமா சிட்டி: மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது.

ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் 56 வயதான விமான கேப்டன் இவான் ஆண்டூர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக அவர் அந்த நேரத்தில் விமானத்தை இயக்கவில்லை. அவருக்கு மருத்துவ உதவி வழங்கும் நோக்கில் பனாமாவில் அந்த விமானத்தை தரையிறக்கியுள்ளார் துணை விமானி. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் பயணிகளில் யாரேனும் மருத்துவர் உள்ளார்களா என விமான குழு கேட்டுள்ளது. யாரும் இல்லாத காரணத்தால் பனாமாவில் விமானம் தரையிறக்கப்பட்டது. கேப்டன் இவான் ஆண்டூர் சுமார் 25 ஆண்டு காலம் அனுபவம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை அன்று விமானம் பயணிகளுடன் பனாமாவில் இருந்து புறப்பட்டுள்ளது. LATAM ஏர்லைன்ஸ் நிறுவனம் உயிரிழந்த இவான் ஆண்டூர் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in