

அணு உலை விபத்து இழப்பீடு பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத வரையில் இந்தியாவில் அணுஉலை அமைக்க ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அமெரிக்க நிபுணர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 2008-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இந்திய அரசின் அணுஉலை விபத்து இழப்பீடு சட்டத்தால் இருநாடுகளுக்கும் இடையே இதுவரை எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த அணுசக்தி துறை நிபுணர் டேனியல் லிப்மேன் கூறியதாவது:
அணுஉலை திட்டங்களில் இந்திய அரசு தற்போது ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுகிறது. குறிப்பாக கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணு உலைகள் தொடர்பாக இந்தியாவுடன் பிரான்ஸும் கைகோத்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்களைப் பொறுத்தவரை அணுஉலை விபத்து இழப்பீடு பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத வரையில் இந்தியாவுடன் அணுஉலை அமைக்க ஒப்பந்தம் செய்து கொள்ள யாரும் தயாராக இல்லை. இந்தியர்கள் ஆங்கிலத்தை சரளமாகப் பேசக்கூடியவர்கள், மிகச் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களும், இன்ஜினீயர்களும் அங்கு உள்ளனர். ஆனால் அணுஉலை விபத்து இழப்பீடு சட்டத்தால் அமெரிக்க நிறுவனங்கள் சிக்கலில் சிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.