பாகிஸ்தான் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

பாகிஸ்தான் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

Published on

கராச்சி: பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. நவாப்ஷாவுக்கும் ஷாஹ்தாபூருக்கும் இடையே சஹாரா ரயில் நிலையத்திலிருந்து புறப்புட்டுச் சென்றபிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்ப் படையினர் நவாப்ஷா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போல கடந்த 2021ஆம் ஆண்டு இதே சிந்து மாகாணத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் ரயில்வே துறையை மேம்படுத்த அரசாங்கங்கள் முயன்று வரும் நிலையில், நிதிப் பற்றாக்குறை காரணமாக அது நிறைவேறாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in