Published : 23 Nov 2017 09:56 AM
Last Updated : 23 Nov 2017 09:56 AM
மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீதை வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ஹபீஸ் சயீது மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு கடந்த ஜனவரி 31-ம் தேதி வீட்டுக் காவலில் வைத்தது. கடந்த அக்டோபர் மாதம் ஹபீஸ் சயீதின் வீட்டுக் காவல் மட்டும் இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கை லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட மறுஆய்வு மன்றம் நேற்று விசாரணை நடத்தியது. அப்போது “வேறு எந்த வழக்கிலும் ஹபீஸ் சயீது தேடப்படாத நிலையில் அவரை விடுவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஹபீஸ் சயீதின் வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற பஞ்சாப் மாகாண அரசின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்தனர்.
இது தொடர்பாக மும்பை தாக்குதல் வழக்கின் வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கூறும்போது, “பாகிஸ்தான் நம்மை மீண்டும் ஏமாற்றிவிட்டது. ஹபீஸ் சயீதை சர்வதேச தீவிரவாதி என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் அந்நாடு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT