Published : 03 Nov 2017 09:38 AM
Last Updated : 03 Nov 2017 09:38 AM

அமெரிக்காவின் தோர்ன்டன் நகரில்: மர்ம நபர் சுட்டதில் 3 பேர் பலி

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம், தோர்ன்டன் நகரில் உள்ள வால்மார்ட் கடையில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் வடகிழக்கில் கொலராடோ மாகாணம் உள்ளது. அங்குள்ள தோர்ன்டன் நகரில் ‘வால்மார்ட்’ கடை உள்ளது. கடந்த புதன்கிழமை மாலை கடைக்குள் புகுந்த மர்ம நபர் கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த ஒரு பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலை நடத்திய நபர் காரில் தப்பிச் சென்றுவிட்டார். அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்ளூர் போலீ ஸார் கூறியபோது, இந்த துப்பாக்கிச்சூடு தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக தெரியவில்லை. எனினும் தீவிரவாத கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபரின் சிசிடிவி புகைப்படத்தையும் அவர் தப்பிச் சென்ற காரின் புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட் டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இசைக் கச்சேரி மீது ஸ்டீபன் என்பவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 58 பேர் பலியாகினர். பின்னர் அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக கொலைவெறி தாக்குதலை நடத்தினார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.

நியூயார்க் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை சைபுல்லா என்ற ஐ.எஸ். தீவிரவாதி, சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரக்கு வாகனத்தை மோதியதில் 8 பேர் பலியாகினர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்க நகரங்களில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்படுவது அந்த நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x