Published : 03 Nov 2017 09:48 AM
Last Updated : 03 Nov 2017 09:48 AM

பாகிஸ்தானில் செயல்படும் 20 தீவிரவாத குழுக்கள்: நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வற்புறுத்தல்

பாகிஸ்தானில் செயல்படும் 20 தீவிரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்த தீவிரவாத குழுக்கள் தொடர்பான பட்டியலை பாகிஸ்தான் அரசிடம் அமெரிக்கா அளித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அண்மையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பாகிஸ்தானில் செயல்படும் 20 தீவிரவாத குழுக்கள் தொடர்பான பட்டியலை அந்த நாட்டு அரசிடம் அவர் அளித்தார். இந்த பட்டியலில் தலிபான் அமைப்பின் ஒரு பிரிவான ‘ஹக்கானி நெட்வொர்க்’ முதலிடத்தில் உள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கில் பழங்குடியினப் பகுதிகளில் பதுங்கியிருந்து செயல்படும் ‘ஹக்கானி நெட்வொர்க்’ தலைவர்களுக்கு அந்த நாட்டு உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. ஆதரவு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்றபோது அந்த அரசை அங்கீரித்த 3 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பது நினைவுகூரத்தக்கது.

தற்போது ஆப்கானிஸ்தானில் நடைபெறும் பெரும்பாலான தீவிரவாத தாக்குதல்களுக்கு ‘ஹக்கானி நெட்வொர்கே’ முழுகாரணம். எனவே அந்த தீவிரவாத அமைப்பின் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபடும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹரகடுல் முஜாகிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இதில் ஹரகடுல் முஜாகிதீன் அமைப்புக்கு அல்-காய்தா அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ளது என்று அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புகளின் நிறுவன தலைவர்களில் ஒருவரான ஹபீஸ் சயீதை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் சீனாவின் உதவியுடன் ஹபீஸ் சயீதுக்கு எதிரான ஐ.நா. நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x