இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த இலங்கை ஆலோசனை

ரணில் விக்கிரமசிங்கே
ரணில் விக்கிரமசிங்கே
Updated on
1 min read

கொழும்பு: இந்திய ரூபாயை இலங்கையும் பொது நாணயமாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக அந்நாட்டின் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதைக் காண விரும்புவதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இந்திய சிஇஒக்கள் கூட்டமைப்பில் உரையாற்றியபோது ரணில் விக்கிரமசிங்கே இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் பேசுகையில், "இந்தியாவின் அண்டை நாடாக இருப்பதால் இலங்கை வளமான வரலாறு, கலாசார பாரம்பரியம், 2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நீண்ட கால நட்பு ஆகியனவற்றால் பயனடைகிறது. கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், கொரியா, சீனா கடந்த 75 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி கண்டன. இப்போது இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்தில் இது இந்தியாவின் காலம். அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதைக் காண விரும்புகிறேன்.

இந்திய ரூபாயையே இலங்கையிலும் ஒரு பொது நாணயமாக பயன்படுத்தினாலும், அதில் பெரிய வித்தியாசம் இருக்கப்போவதில்லை. அதை, எப்படி சாத்தியப்படுத்துவது என்று இனி ஆலோசிக்கப் போகிறோம்.

வெளி உலகுடனான நட்புறவில் இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டிய சூழலில் இலங்கை உள்ளது. உலகம் பல புதிய பரிமாணங்களில் வளர்கிறது. இந்தியா பிரதமர் மோடி தலைமையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

அடுத்த வாரம் ரணில் விக்கிரமசிங்கே டெல்லி வருகிறார். இலங்கையின் அதிபராக கடந்த ஆண்டு அவர் பதவியேற்ற பின்னர் இந்தியா வருவது இது முதன் முறையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in