

சீனாவில், சூதாட்டத்தில் தோற்று ஏகப்பட்ட இழப்பைச் சந்தித்த நபர் ஒருவர் ஆத்திரத்தில் பயணிகள் பேருந்துக்கு தீ வைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடுஞ்செயலுக்கு 2 பேர் பலியாகியுள்ளதோடு, 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் 8 பேர் உயிருக்குப் போராடி வருவதாக போலீஸ் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.
குவாங்டாங் என்ற தெற்கு மாகாணத்தில் உள்ள குவாங்சூ நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தக் கொடுஞ்செயலைப் புரிந்தவரின் அசல் பெயர் என்னவென்று தெரியவில்லை. இவர் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
போலீசார் அவரை இன்று கைது செய்தனர். அவர் தனது வாக்குமூலத்தில், சூதாட்டத்தில் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்ட ஆத்திரத்தில் பேருந்துக்கு தீ வைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
சீனாவில் வெறுத்துப்போகும் இளைஞர்கள் பலர் இதுபோன்று பயணிகள் பேருந்துக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இந்த மாதத்தின் துவக்கத்தில் ஷெய்ஜாங் மாகாணத்தில் ஹாங்சூ பகுதியில் 34 வயது நபர் ஒருவர் பேருந்துக்குத் தீ வைத்தார். அந்தப் பேருந்தில் சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். இவர்களில் 32 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பியூஜியானில் உள்ள சியாமென் பகுதியில் குலைநடுங்கச் செய்யும் பேருந்து எரிப்பு சம்பவத்தில் 47 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது