பாதுகாப்பு பணியில் 45,000 போலீஸார் குவிப்பு: பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் உடல் அடக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பாரிஸ்: பிரான்சில் வாகன சோதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45,000 போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நாந்தேரி என்ற இடத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் வந்த17 வயதுடைய நஹெல் என்ற சிறுவன் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி செல்ல முயன்றதால் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த சம்பவம் பிரான்சில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுமக்கள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த 45,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஏராளமான பொதுச் சொத்துகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டது. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கலவரம் தொடர்பாக இதுவரையில் 2,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அந்த சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். போலீஸாரின் இனப் பாகுபாடே இதற்கு காரணம் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்து ஜெர்மனி சுற்றுப் பயணத்தை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ரத்து செய்து உள்நாட்டு பாதுகாப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

"பாதுகாப்பு படையினரின் தீவிரமான முயற்சியால் 5 நாட்களுக்குப் பிறகு பதற்றம் தணிந்து இரவில் அமைதி நிலவியது" என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால் டார்மன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in