Published : 12 Jul 2014 10:00 AM
Last Updated : 12 Jul 2014 10:00 AM

தாய்லாந்தில் 3 போலீஸார் சுட்டுக்கொலை

தாய்லாந்தின் தெற்கில் உள்ள யாலா மாகாணம், கிராங் பினாங் மாவட்டத்தில், முஸ்லிம் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வியாழக்கிழமை, இவர்கள் மூவரும் மாலைநேரத் தொழுகையை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிவிட்டனர். இந்தத் தாக்குதலில் இமாம் ஒருவரும் காயமடைந்தார்.

இதுகுறித்து யாலா போலீஸ் துணை காமாண்டர் பன்லு சுவெத் கூறும்போது, “நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் தீவிரவாதிகளின் சதிவேலை இது” என்றார். தாய்லாந்தின் தெற்கில், மலேசிய எல்லையை ஒட்டியுள்ள இப்பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்புகள் அன்றாட நிகழ்வாக உள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இப்பகுதியில் கடந்த 2004 முதல் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிரவாதத்துக்கு பலியாகியுள்ளனர்.

பாதுகாப்பு படையினர், அதிகாரிகள் மட்டுமன்றி முஸ்லிம் மற்றும் புத்த மதத்தினரும் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர். மலாய் கலாச்சாரம் மற்றும் மொழியை தாய்லாந்து அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும் அவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டும் தீவிரவாதிகள் தங்கள் பகுதிக்கு சுயாட்சி கோருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x