Published : 18 Jul 2014 10:00 AM
Last Updated : 18 Jul 2014 10:00 AM

தீவிரவாதிகள் தாக்குதல்: 14 டுனிசிய ராணுவ வீரர்கள் பலி

அல்ஜீரிய எல்லைக்கு அருகே தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 டுனிசிய ராணுவ வீரர்கள் பலியாயினர்.

கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட அரபு எழுச்சி மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களால் டுனிசியாவில் அல் காய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு முதல் சாம்பி சிகரம் மற்றும் கெஃப் பகுதிகளில் ஜிஹாதி வன்முறைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளை எதிர்த்து டுனிசிய ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அல்ஜீரிய எல்லை அருகே தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் மேற்கொண்ட போரில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். 1956-ம் ஆண்டு டுனிசியா விடுதலை பெற்றதிலிருந்து இப்போதுவரை மிக அதிக அளவில் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இதே இடத்தில் தான் 2013-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலோடு இதுவரை மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எல்லாம் முதன்முறையாகக் கடந்த மாதம் பொறுப்பேற்றுள்ளது இஸ்லாமிக் மஹ்ரெப்பின் அல் காய்தா தீவிரவாத அமைப்பு.

இவர்களை எதிர்த்து ராணுவத்தினர் தொடர்ந்து போரிட்டு வருவதாகக் கூறினாலும் அவர்களை எல்லாம் கூண்டோடு ஒழிக்க சில காலம் பிடிக்கும் என்கின்றனர் உயர் அதிகாரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x