Published : 05 Oct 2017 09:22 AM
Last Updated : 05 Oct 2017 09:22 AM

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு: பாகிஸ்தான் நிதியமைச்சர்இஷாக் தர் நீதிமன்றத்தில் ஆஜர்

பனாமா நாட்டில் உள்ள சட்ட அமைப்பு ஒன்று உலகளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்கள், வெளிநாடுகளில் சொத்துக்களைக் குவித்தவர்களின் விவரங்களை வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், நிதியமைச்சர் இஷாக் தர் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியில் இருந்து விலக கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் இருவர் மீதும் ஊழல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

அதன்படி, இஷாக் தர் மீது கடந்த மாதம் 8-ம் தேதி ஊழல் தடுப்பு அமைப்பான தேசிய நம்பகத்தன்மை ஆணையம் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முகமது பஷீர் நேற்று விசாரித்தார். அப்போது இஷாக் தர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு எதிராக வங்கி அதிகாரிகள் இஷ்டியாக் அலி, தாஹிர் ஜாவேத் ஆகியோர் சாட்சியம் அளித்தனர். அவர்களின் வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு நீதிபதி பஷீர் ஒத்திவைத்தார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x