Published : 10 Oct 2017 10:10 AM
Last Updated : 10 Oct 2017 10:10 AM

நவாஸின் மகளுக்கு ஜாமீன்: மகன்களை கைது செய்ய வாரன்ட்

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு காரணமாக நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்தார். இந்த வழக்கில் அவரது 2 மகன்களும், மகள், மருமகன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேசிய ஊழல் தடுப்பு பிரிவு (என்ஏபி) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாத நவாஸ் ஷெரீபின் மருமகன் சர்தாரை கைது செய்ய நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் லண்டனில் இருந்து நேற்று இஸ்லாமாபாத் திரும்பிய சர்தாரை, போலீஸார் அழைத்து சென்று என்ஏபி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர். அவரது மனைவியும் நவாஸின் மகளுமான மரியமும் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனிடையே வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் தரப்பில் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் நவாஸின் மகன்கள் ஹாசன், ஹுசைன் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இருவரும் தற்போது லண்டனில் உள்ளனர். அவர்களை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x