Published : 08 Jun 2023 02:33 PM
Last Updated : 08 Jun 2023 02:33 PM

நியூயார்க் நகரத்தை சூழ்ந்த ஆரஞ்சு புகை; அச்சமடைந்த மக்கள்: பின்னணி என்ன?

ஆரஞ்சு நிற புகை சூழ்ந்த நியூயார்க் நகரம்

வாஷிங்டன்: நியூயார்க் நகரம் சில மணி நேரங்கள் ஆரஞ்சு நிற புகையால் மூடப்பட்டதால் மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர்.

கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் தாக்கத்தினால் உருவான நச்சுப் புகைகள்தான் வட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கிய நிலையில் மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர்.

இந்தப் புகையினால் நியூயார்க்கில் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியது, அதனால் அன்றைய நாளில் உலகளவிலான காற்றின் தரத்தின் அடிப்படையில் மிக மோசமான நகரங்களில் ஒன்றாக நியூயார்க் அடையாளப்படுத்தப்பட்டது.

இது குறித்து நியூயார்க் வானிலை மையம் கூறும்போது, “வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகள், மோசமான காற்றின் தரத்தால் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் வெளியே வருவதை குறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளது.

மேலும் நியூயார்க் நகரம் சில நொடிகளில் ஆரஞ்சு நிறமாக மாறிய வீடியோ பதிவையும் நியூயார்க் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பூமியின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளம், காட்டுத் தீ, மலையின்மை, வறட்சி போன்ற தீவிர இயற்கை பேரிடர்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பை உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது என்ற எச்சரிக்கையை சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x