Last Updated : 05 Oct, 2017 05:06 PM

 

Published : 05 Oct 2017 05:06 PM
Last Updated : 05 Oct 2017 05:06 PM

9 லட்சம் ரோஹிங்கிய அகதிகளை தங்க வைக்க 2000 ஏக்கர் நிலப்பரப்பு: வங்கதேசம் ஒதுக்கீடு

உலகிலேயே மிகப்பெரிய அகதிகள் முகாம் என்ற அளவில் வங்கதேசம் 9 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளை தங்க வைக்க 2,000 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கியுள்ளது.

மியான்மரில் பவுத்தர்கள் மற்றும் மியான்மர் ராணுவத்தினரின் அராஜகங்களிலிருந்து தப்பி ஓடி வரும் ரோஹிங்கியர்கள் பெருமளவு வங்கதேசத்தில் புகுந்துள்ளனர். இவர்களை இந்தியா வெளியேற்றுவோம் என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில் 9 லட்சம் அகதிகளைத் தங்க வைக்க கட்டுமானம் ஒன்றை ஏற்படுத்த 2000 ஏக்கர் நிலப்பரப்பை வங்கதேச அரசு ஒதுக்கி மனித நேயத்தில் முன்னுதாரணமாக திகழ்கிறது.

வங்கதேச பேரழிவு மேலாண்மை மற்றும் நிவாரணத்துறை அமைச்சர் மொபசல் ஹுசைன் சவுத்ரி மயா, “உத்தேசமாக 8-9 லட்சம் ரோஹிங்கிய அகதிகள் குடுபலாங் அருகே உள்ள புதிய முகாமுக்கு மாற்றப்படுவார்கள்.

தனித்தனியாக சிதறுண்ட ரோஹிங்கியர்களை ஒரு இடத்தில் கொண்டு வரும் முயற்சியே இது. இதற்கு பெரிய நிலப்பரப்பு தேவை, மெதுவே அனைவரும் இந்த இடத்துக்கு வந்து விடுவார்கள்” என்றார்.

2,000 ஏக்கர் நிலப்பரப்பு கூட மேலும் 1000 ஏக்கர்கள் விஸ்தரிக்கப்படலாம் என்றார் அமைச்சர் மயா.

ஆனால் இவ்வளவு பெரிய மக்கள் தொகையை ஒரே இடத்திற்கு மாற்றுவது பெரிய அளவில் சுகாதாரக் கேட்டை உருவாக்கும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

மியான்மரில் உள்ள நிலவரம் பற்றி புலம்பெயர்வோர் சர்வதேச அமைப்பு என்ற ஐநா அமைப்ப்பு கூறுகையில், “மியான்மர் நெருக்கடி மெதுவாக மிகப்பெரிய அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தது.

ஏற்கெனவே தங்கியுள்ள முகாம்களில் கடந்த வாரம் வயிற்றுப்போக்கு நோய் பரவியது, காரணம் சுகாதாரமற்ற சுற்றுச் சூழல்தான்.

ரோஹிங்கிய அகதிகளுக்கு உதவி புரிய சுமார் 430 மில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக ஐநா மனிதார்த்த விவகாரங்கள் செயலர் மார்க் லோகாக் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x