

சிறுவர், சிறுமியருக்கான சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ராபர்ட் பேடன் பவெல். இங்கிலாந்தில் 1857 பிப்ரவரி 22-ம் தேதி ராபர்ட் பிறந்தார். இவர் பயின்ற பள்ளியைச் சுற்றிலும் காடாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் சென்றுவிடுவார்.
மலையேறுவது, காட்டு விலங்குகளைப் பிடிப்பது, நெருப்பு உண்டாக்குவது ஆகியவற்றை தானாக கற்றுக்கொண்டார். 1876-ல் ராணுவத்தில் இணைந்தார். சிறு படையைக் கொண்டு அற்புதமான போர்த்தந்திரங்களைக் கையாண்டு, எதிரிகளை நிலைகுலையச் செய்தார்.
இவரது திறமைகளைப் பாராட்டிய ஆப்பிரிக்க சுதேசிகள் ‘ஒருபோதும் தூங்காத ஓநாய்’ என்பதைக் குறிக்கும் ‘இம்பிசா’ என்ற பெயரில் அழைத்தனர். 43 வயதிலேயே மேஜர் ஜெனரல் பதவியை எட்டிவிட்டார். 1907-ல்‘ஸ்கவுட்டிங் ஃபார் பாய்ஸ்’ என்ற நூலை ராணுவத்தினருக்கான பாடப்புத்தகமாக எழுதினார்.
பெண்களும் இந்த இயக்கத்தில் சேர முன்வந்தனர். 1910-ல்சிறுமியர் சாரணர் இயக்கத்தை தொடங்கினார். ராணுவத்தை விட்டு, சாரணர் இயக்கத்தை வழிநடத்தினார். இந்த இயக்கத்துக்காக 30 ஆண்டுகள் கடுமையாகப் பாடுபட்டார். ‘ஸீ ஸ்கவுட்’, ‘கப்ஸ் ஸ்கவுட்’, ‘ரோவர் ஸ்கவுட்’, ‘ஏர் ஸ்கவுட்’ என உருவாக்கி, மக்களின் அனைத்துப் பிரிவினரையும் இணைக்கக்கூடிய இயக்கமாக இதை மாற்றினார்.