பிப். 17: இன்று என்ன? - தாகூருக்குப் பிறகு புகழடைந்தவர்

பிப். 17: இன்று என்ன? - தாகூருக்குப் பிறகு புகழடைந்தவர்
Updated on
1 min read

பிரபல வங்கக் கவிஞர், வங்க இலக்கியத்துக்கு நவீன பாணியை அறிமுகம் செய்தவர் ஜீபனானந்த தாஸ். ரவீந்திரநாத் தாகூருக்குப் பிறகு கொண்டாடப்பட்ட வங்க எழுத்தாளர் இவர். அன்றைய வங்கதேச மாகாணம் பரிசால் நகரில் 1899 பிப்ரவரி 17-ம் தேதி பிறந்தார். ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே பயின்றார். பரிசால் பிரஜமோகன் கல்லூரி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கொல்கத்தா சிட்டி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவரது முதல் கவிதை 1919-ல்வெளிவந்தது. ‘ஜாரா பலக்’ என்ற முதல் கவிதை தொகுப்பு 1927-ல்வெளிவந்தது.

இவரது கவிதைகளில் சமூக அக்கறை அதிக அளவில் வெளிப்பட்டது. 1940 முதல் 1950 வரை வெளிவந்த கவிதைகளில் அரசியல், இரண்டாம் உலகப்போர், வங்கதேசத்தின் வறட்சி, மதக் கலவரம் போன்றவை கருவாக வெளிப்பட்டன. “ரூப்சி பங்களா” போன்ற கவிதை தொகுப்பு புகழ்பெற்றதோடு, சர்ச்சையையும் கிளப்பியது. இவரது மறைவுக்குப் பிறகு ஏராளமான கவிதைகள், உரைநடைகள் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டன. இவரது ‘ஸ்ரேஷ்ட கவிதா’ என்ற கவிதை தொகுப்பிற்கு 1955-ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in