

தொழிற்புரட்சிக்கு வித்திட்டவர் ஜேம்ஸ் வாட். ஸ்காட்லாந்தில் 1736 ஜனவரி 19 ல் பிறந்தார். சிறுவயதில் காகிதம் வாங்கக் கூட காசு இல்லாததால், வீட்டுத் தரையிலேயே வரைவார். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார்.
ஊர் திரும்பியவருக்கு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை கிடைத்தது. தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு 1764-ல் கிடைத்தது. அப்போது அதிக சக்தி வீணாவதைக் கண்டறிந்தார். இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கருவி, அழுத்தமானி, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவி இயந்திரம், த்ராட்டில்-வால்வு ஆகியவற்றை கண்டுபிடித்தார்.
1775-ல் பொறியாளர் மேத்யூவுடன் இணைந்து நீராவி இயந்திரங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். உற்பத்தி பல மடங்கு பெருகியது. மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு ‘வாட்’ என இவரது பெயரே சூட்டப்பட்டது. ஆராய்ச்சி கூடத்தில் அல்லாமல் இயந்திர பட்டறையில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய வரலாற்று நாயகர் ஜேம்ஸ் வாட்.