

கல்கண்டு, ஆனந்த விகடன், அமுத சுரபி உள்ளிட்ட இதழ்களில் பல தொடர்கள், பல துப்பறியும் நாவல்களை எழுதியவர் தமிழ்வாணன். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராமநாதன். தமிழ்த் தென்றல் திரு.வி.க. சூட்டிய பெயரே தமிழ்வாணன். கிராம ஊழியன் இதழில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். கறுப்பு கண்ணாடியும், தொப்பியும், கோட் சூட் உடையும் இவரது அடையாளமானது. இவர் எழுதிய சிரிக்காதே, சுட்டுத் தள்ளு, அல்வாத் துண்டு, பயமா இருக்கே போன்ற சிறுவர் நாவல்கள் அமோக வரவேற்பு பெற்றன. இவர் உருவாக்கிய துப்பறிவாளர் சங்கர்லால் மிகவும் பிரபலம். 2014-ல் அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. 1977-ல் நவம்பர் 10-ம் தேதி காலமானார்.