

சைவ மறுமலர்ச்சி அலையை உருவாக்கிய முன்னோடி அறிஞர்களில் ஒருவர் ஜெ.எம்.நல்லுச்சாமிப்பிள்ளை. பேச்சாளர், வழக்கறிஞர், சில காலம் நீதிபதியாக பணியாற்றினார்.
திருச்சியில் பிறந்தவர் அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றார், அடுத்து பி.எல். பட்டமும் பெற்றார். 1887-ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.
1895-ல் சிவஞானபோதம் நூலின் ஆங்கில மொழியாக்கத்தை அவர் லண்டனில் வெளியிட்டார்.
“சித்தாந்த தீபிகை” என்ற சைவ இதழை நெடுங்காலம் நடத்தினார். அதில் சைவ சித்தாந்தத்தை நவீன நோக்கில் விரிவாக விளக்கினார். Studies on Saiva Sithaantha எனும் சைவ சித்தாந்தம் குறித்த ஆங்கில நூலையும் எழுதினார். 1920 ஆகஸ்ட் 11-ம் தேதி மதுரையில் மரணம் அடைந்தார்.