இன்று என்ன? - கூத்தாடி என்பதை கலைஞர் என மாற்றியவர்

இன்று என்ன? - கூத்தாடி என்பதை கலைஞர் என மாற்றியவர்
Updated on
1 min read

தமிழ் நாடகத் தந்தை என்று அழைக்கப்படுபவர் பம்மல் சம்பந்த முதலியார். இவர் 1873 பிப்ரவரி 9-ம் தேதி சென்னை பல்லாவரம் பம்மலில் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928-ம் ஆண்டு வரை நீதிமன்ற தலைவராக பணியாற்றினார். தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரைநடையில் எழுதினார். பார்சி நாடக குழு பிரம்மாண்ட திரை, மேடை அமைப்பு, உடை அலங்காரம் இவரை கவர்ந்தன.

அவற்றை தன் நாடகங்களிலும் செயல்படுத்தினார். 1891-ல் சென்னையில் சுகுணவிலாச சபா நாடக சபையை தோற்றுவித்து தானே நாடகங்களை எழுதி நடித்தார். 22-வது வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது.

ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட், அஸ் யு லைக் இட், மெக்பெத் உள்ளிட்ட நாடகங்களை தமிழில் எழுதினார். நடிப்பவர்களை அப்போது கூத்தாடி என்று அழைத்து வந்தனர். அதை ஏற்காமல் அவர்களை கலைஞர்கள் என்று அழைக்கும்படி வற்புறுத்தி செயல்வடிவத்திற்கு கொண்டு வந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in