Published : 27 Nov 2023 04:00 AM
Last Updated : 27 Nov 2023 04:00 AM

இன்று என்ன? - சமூகநீதியின் காவலர் வி.பி.சிங்

இந்தியாவின் 7-வது பிரதமர் விசுவநாத் பிரதாப் சிங். இவர் 1931-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தின அலகாபாத்தில் பிறந்தார். நாட்டு பற்று காரணமாக இளம் வயதிலேயே வினோபா பாவேவின் பூமிதான இயக்கத்திற்கு தனது நிலத்தை தானமாக வழங்கினார். 1980-ல் அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றார். 1984-ல் மத்திய நிதியமைச்சராகப் பணியாற்றியபோது வரி ஏய்ப்பில் ஈடுபட்ட தொழிலதிபர்களை கைதுசெய்தார். அவர் பிரதமராக இருந்த போதுதான் காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்தார்.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினார். தன் மீது கற்கள் வீசப்பட்டபோது, ‘நான் உங்கள் முன்னால், ரத்தமும் சதையுமாக நின்றுகொண்டிருக்கிறேன். என் முன்னால் வந்து தாக்குங்கள். ஆனால், நான் ஏற்றுக்கொண்டிருக்கிற சமூகநீதிக் கொள்கையில் நான் உறுதியாகவே இருக்கிறேன்’ என்று முழங்கினார். 2008 நவம்பர் 27-ல் காலமானார். ‘சமூகநீதியின் காவலர்’ என போற்றப்படும் வி.பி.சிங்கை கவுரவிக்கும் வகையில் சென்னை மாநிலக் கல்லூரியில் அவரது உருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x