இன்று என்ன? - சீர்திருத்தவாதி நாராயண குரு

இன்று என்ன? - சீர்திருத்தவாதி நாராயண குரு
Updated on
1 min read

இலக்கியப் படைப்பாளி, கல்வியாளர் ஸ்ரீ நாராயணகுரு 1856-ல் கேரள மாநிலம் செம்பழஞ்சி கிராமத்தில் பிறந்தார். அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். 23 வயதில் துறவு பூண்டார். 1888-ல் அருவிக்கரை குருகுலத்தை நிறுவி ஏழை, ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளிகளை திறந்தார்.

1897-ல் மலையாளத்தில் ‘ஆத்மோபதேச சதகம்’ என்ற இலக்கியத்தை இயற்றினார். இது தலைசிறந்த தத்துவ நூலாக போற்றப்பட்டது. ‘சுப்ரமணிய சதகம்’, ‘தோத்திரப்பாடல்கள்’, ‘தரிசன மாலா’, ‘வேதாந்த சூத்திரம்’, ‘தர்மம்’, ‘தேவாரப் பதிகங்கள்’ உள்ளிட்ட நூல்களைப் படைத்தார். இதில் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது சீர்திருத்தக் கொள்கைகளின் விளைவாக  நாராயண தர்ம பரிபாலன சபை உருவானது. மகாத்மா காந்தி இவரை ‘அவதார புருஷர்’ எனப் போற்றினார்.

இவரது தத்துவம் குறித்து பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ‘அனைத்தும் ஒன்றே’ என்ற கோட்பாட்டை உருவாக்கினார். ‘இரண்டாம் புத்தர்’, ‘இந்திய சமூகச் சீர்திருத்தவாதி’, ‘ஆன்மிகத்தில் பல புதுமைகளைக் கொண்டு வந்தவர்’ என எல்லோராலும் போற்றப்பட்ட நாராயண குரு 1928 செப்டம்பர் 20-ம்தேதி 72 வயதில் சமாதி அடைந்தார். இவரது நினைவாக 1967-ம் ஆண்டு இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in