Published : 12 Sep 2023 04:00 AM
Last Updated : 12 Sep 2023 04:00 AM

இன்று என்ன? - பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தா

சங்க இலக்கியங்களின் பாதுகாவலரும், பதிப்புத்துறை யின் முன்னோடியுமான சி.வை. தாமோதரம் பிள்ளை 1832 செப்டம்பர் 12-ல் இலங்கை யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் பிறந்தார்.

யாழ்பாணம் வட்டுக்கோட்டை பல்கலையில் கணிதம், மெய்யியல், வானவியல், அறிவியல் கற்றார். கோப்பாய் சக்தி வித்யாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1853-ல் ‘நீதிநெறி விளக்கம்’ நூலை பதிப்பித்து வெளியிட்டார்.

‘தினவர்த்தமானி’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்று சென்னை வந்தார். 1884-ல் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1895-ல் ‘ராவ் பகதூர்’ பட்டம் பெற்றார். வழக்காடுவதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தமிழ் நூல்கள் பலவற்றை பதிப்பித்தார்.

சேதமடைந்த ஏடுகளை மிக கவனமாகப் பிரித்து, பிரதி எடுத்துப் பதிப்பித்தார். மிகவும் சிரமப்பட்டு தொல்காப்பியப் பொருளதிகாரச் சுவடிகளை தேடிக் கண்டுபிடித்து, அச்சிட்டு தமிழகம் முழுவதும் கிடைக்கச் செய்தார். இந்த அரிய பணியை தமிழ் அறிஞர்கள் வியந்து பாராட்டினர்.

வீரசோழியம், திருத்தணிகைப் புராணம், கலித்தொகை, சூளாமணி, இலக்கண விளக்கம் உட்பட பல நூல்களைப் பதிப்பித்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலையான இடத்தையும், நீடித்த புகழையும் பெற்றார். தமிழ்ச் செவ்வியல் நூற்பதிப்பு வரலாற்றில் புதிய தடத்தை உருவாக்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x