Last Updated : 18 Nov, 2022 06:15 AM

 

Published : 18 Nov 2022 06:15 AM
Last Updated : 18 Nov 2022 06:15 AM

அரசு பள்ளிகளில் வேகமெடுக்கும் போதை தடுப்பு விழிப்புணர்வு

சென்னை: அரசு பள்ளிகளில் முன்னெப்போதும் இல் லாத அளவுக்கு மாணவர்களிடம் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. தமிழகத்தில் கல்லூரிகளில் இருந்த போதை பழக்கம் இப்போது பள்ளிகளில் குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனா காலத்தில் மாணவர்கள் சுயமாக பணம் சம்பாதித்ததாலும், சீனியர் மாணவர்களுடன் சேர்ந்து போதை பழக்கத்திற்கு அடிமையானதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி: மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை யாவதைத் தடுக்க கடந்த 2020-ம் ஆண்டில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் சுகாதாரத் துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், அதனால் மாணவர்களிடம் பெரிய தாக்கம் ஏற்படவில்லை. இதனிடையே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் நடமாட்டம் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை காவல்துறையும் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரித்தால், மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களது பேண்ட், சட்டை பைகள், புத்தக பைகள் சோதனையிடப்பட்டன. இதனால் பள்ளி விளையாட்டு மைதானத்தில் போதைப் பொருளை மறைத்து வைத்து அடையாளத்திற்கு அதன்மீது கல்வைத்து விட்டுப் போகிறார்கள். தேவைப்படும் நேரம் அந்த போதைப் பொருளை எடுத்துப் பயன்படுத்துகின்றனர்.

விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் அங்குள்ள கழிவறையில் போதைப் பொருளை மறைத்து வைக்கின்றனர். கழிவறைக்கு போவதாக கூறிவிட்டு, அங்கு போய் போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள். இதைக் கண்டுபிடித்து ஆசிரியர்கள் கண்டித்தால் மாணவர்கள் எதிர்வினையாற்றி பெரும் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள சில அரசியல் கட்சிகளும் உடந்தையாக இருப்பதுதான் வேதனையளிக்கிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.

தீவிர நடவடிக்கை: இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போதை தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் போதை தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் வேகமெடுத்துள் ளன. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம், நெல்லூரில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆ.கருப்பையா கூறியதாவது:

போராடும் ஆசிரியர்கள்: தினமும் பள்ளியில் காலையில் நடைபெறும் இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களின் போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து எடுத்துரைக்கிறோம். வகுப்பறையிலும் அதுகுறித்து கூறுகிறோம். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்காகவும், புதிதாக போதைப் பழக்கத்திற்கு வேறு மாணவர்கள் அடிமையாகிவிடக்கூடாது என்பதற்காகவும் முடிந்தவரை போராடுகிறோம். போதை பழக்கம் உள்ள மாணவர்களை கண்டறிந்தாலும் அவர்களை மிரட்டுவதில்லை. அவ்வாறு செய்தால் எதிர்வினை ஏற்படும்.அதனால் போதை பழக்கத்தால் உடல், மன ரீதியாக ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து அன்பாக எடுத்துக் கூறுகிறோம். அதைக் கேட்டு திருந்திய மாணவர்களும் உண்டு.

"எமிஸ்" செயலியில் மாணவனுக்கு போதை பழக்கம் உள்ளதா, இல்லையா என்ற கேள்வியும் உண்டு. அதற்கு நாங்கள் பதில் அளிப்பதில்லை. ஏதாவது அதில் பதிவிட்டால், போலீஸ் விசாரணை வரைகூட நிலைமை மோசமாகலாம். அதனால் குறிப்பிட்ட மாணவனின் எதிர்காலம் பாதிக்கும். வகுப்பில் பாடம் நடத்துவதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதைத் தாண்டி போதைக்கு அடிமையான மாணவர்களை மீட்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கிறோம் என்கிறார் ஆசிரியர் கருப்பையா. அரசு பள்ளிகளில் போதை தடுப்பு விழிப்புணர்வுக்கு நடவடிக்கைகள் வேகமெடுத்திருக்கும் அதேநேரத்தில் அது தொடர்வதைக் கண் காணிப்பதும் மிகவும் அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x