

பிலிம் அப்ரிசியேஷன் பள்ளிகளில் பாடமாக்கப்பட வேண்டும் என்று மறைந்த திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா கூறி வந்தார். தமிழ் சினிமாக்களை மட்டும் தொடர்ந்து பார்த்து வரும் மாணவர்கள் சினிமா என்கிற கலையை அதன் ஆற்றலை உணரக்கூடிய வாய்ப்பைப் பெறுவதில்லை. அதனால்தான் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி “மகேந்திரன் திரைப்படச் சங்கம்” என்ற ஒன்றை உருவாக்கி, மாணவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள நல்ல திரைப்படங்களை மாதந்தோறும் திரையிட்டு கலந்துரையாடல்களை நிகழ்த்தி வருகிறது.
வீடு, உறவுகள் தாண்டி ஒரு குழந்தைக்கான சமூக உறவை ஏற்படுத்தித் தருவது பள்ளிக்கூடங்கள்தான். இங்கிருந்துதான் சமூகத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்க்கவும், பழகவும் கற்றுக் கொள்கிறார்கள். “பள்ளியில் எதுவெல்லாம் கற்றுத் தரப்படுகிறதோ அதுவே மிகச் சரியானது என நம்புகிறது குழந்தைகள் உலகம்” என்கிறார் எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் க.துளசிதாசன்.
மகேந்திரன் திரைப்படச் சங்கத்தில் உள்ள குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் திரையிடலில் பங்கு பெறுகிறார்கள். திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் படத்தை அறிமுகம் செய்து மாணவர்களோடு உரையாடுகிறோம். படம் பார்த்து முடித்ததும், மாணவர்களின் கருத்துகளைக் கேட்கிறோம்.
இதன்மூலம் ஒரு திரைப்படம் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட அனுபவத்தை அளிக்கவல்லது என்ற உண்மை தெரியவந்தது. வேற்று மொழி படமாக இருந்தாலும் அது புரியாது என்கிற பேச்சுக்கே மாணவர்கள் இடமளிக்கவில்லை. மொழியைத் தாண்டி மனித உணர்வுகளை கிரகித்துக் கொள்கிற அளவுக்கு ஒவ்வொரு குழந்தையுமே ஆற்றுலுடையது என நிரூபிக்கின்றனர். ஒரு நாயகனை மதிக்கிற இடத்தில் இருந்து தங்களை மதிக்கிற இடத்திற்கு நகர்கிறார்கள்.
கட்டுரையாளர்: ‘கார்கி’ உள்ளிட்ட தமிழ்த்திரைப்படங்களின் வசனகர்த்தா.