Last Updated : 25 Aug, 2022 06:06 AM

 

Published : 25 Aug 2022 06:06 AM
Last Updated : 25 Aug 2022 06:06 AM

மாநில கல்விக் கொள்கை: சில புரிதல்களும் செய்ய வேண்டியவைகளும்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் அப்போதே கல்விக் கொள்கையானது மாநிலங்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும் என வலுவான குரல்கள் எழுந்தன.

அதன் நீட்சியாகத் தமிழகத்திற்கான கல்விக்கொள்கையை வகுக்க தற்போதைய அரசு, நீதியரசர் (ஓய்வு) த.முருகேசன் தலைமையில் குழு ஒன்றினை உருவாக்கியுள்ளது. இன்னும் சில மாதங்களில் பல்வேறு அமைப்புகள், கள ஆய்வுகள், கலந்துரையாடல்கள், ஆலோசனைகள் எல்லாம் முடித்து கொள்கை வரைவினை தமிழக அரசிற்குச் சமர்ப்பிக்கும்.

இந்த ஓட்டத்தில் பொதுமக்களின் கருத்து, ஆசிரியர் சமூகத்தின் கருத்து, குழந்தைகளின் கருத்து எல்லாமே முக்கியமானவை. ஏனெனில் இந்த கொள்கையே இவர்களுக்கானது தானே.

கல்விக்கொள்கை என்றால் என்ன?

கல்விக்கொள்கைக்கு என்று ஒரு உயரிய நோக்கம் இருக்கும். அந்த நோக்கத்தினை எப்படிஅடைவது என்ற விரிவான விளக்கங்கள், இலக்குகள் ஆகியவை இருக்கும்.

அது ஒரு குழந்தை பள்ளிக்கு தயாராவது முதல், பள்ளிக்குள் நுழைவது எப்போது, நுழைந்ததும் வளர்க்க வேண்டியவை, அந்த நிலையில் குழந்தையின் மனவளர்ச்சி, பின்னர் அந்தக் குழந்தை படிக்க வேண்டிய பாடங்கள், எப்படி கற்பிக்கப்படும், எப்படி அவர்கள் மதிப்பிடப்படுவார்கள், என்னென்ன பாடங்கள் எந்தவகுப்பில் இருக்கும், வகுப்புகளின் கட்டமைப்பு, என்ன மொழியில் படிக்க வேண்டும், பொதுத்தேர்வுகள் யாவை, எப்படி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளுக்குள் நுழைவார்கள், கல்லூரிகளில் என்னென்ன பட்டங்கள் எந்த கல்லூரி, மேற்படிப்பு எல்லாம் முடிக்கும் வரையில் என்னென்ன எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்வதே கல்விக்கொள்கை.

மேலே குறிப்பிட்டவைகளை அடைய பள்ளிகள் என்ற கட்டமைப்பு, ஆசிரியர்கள், வளங்கள் எல்லாம் தேவை. பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கலாம், அதன்அடிப்படைத் தேவைகள் ஆகியவை வரையறுக்கப்படும். இது நிலப்பரப்புகளுக்கு ஏற்ப மாறுபடும். மிக முக்கியமாக எல்லாவற்றையும் கட்டமைத்த பின்னர் ஆசிரியர்களே இவை அனைத்தையும் செயல்படுத்த உள்ளனர்.

அவர்களே குழந்தைகளுடன் தினமும் உரையாட உறவாடப் போகிறார்கள். அவர்களை எப்படி தேர்வு செய்வது, அவர்களுக்கான பயிற்சிகள், சலுகைகள், தேவைகள், காலத்திற்கு ஏற்ப பயிற்சிகள், அவர்களுக்கான சுதந்திரம், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், பயிற்றுவிப்பதற்கான பயிற்சி முறைகள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

மக்கள் கருத்தால் மாற்றம் ஏற்படுமா?

இந்நிலையில், தமிழகத்துக்கான கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அக்டோபர் 15-ம் தேதி வரை அனுப்பி வைக்கும்படி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 1960களில் கொடுத்த கோத்தாரி கமிஷன் பரிந்துரைகளையே இன்னும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

கல்விக்கொள்கை நடைமுறை வழிகளையும் கூடவே யோசித்து ஆவணப்படுத்த வேண்டும். இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்போது மக்கள் கருத்து தெரிவிப்பதால், உரையாடல் நடத்துவதால் கொள்கையில் மாற்றம் ஏற்படுமா என்கிற கேள்வி எழலாம்.

இது வெறும் கொள்கைக்கான அடித்தளம் அல்ல. உரையாடல்கள் நிறைந்த சமூகம் வலுவானது. கல்வி பற்றிய புரிதல் உள்ள சமூகம் ஆரோக்கியமானது. விழிப்படைந்த மக்கள் இருக்கும்போது அரசு இன்னும் கவனமாக செயல்படும். அரசு வேறு ஏதோ நிறுவனமும் அல்ல, அது மக்களின் பிரதிநிதி. காத்திரமான உரையாடல்கள் நம்மை(சமூகத்தினை) மேலும் உற்சாகமுடனும் தேவையான இடங்களில் கைகொடுத்து உதவவும் முற்படும்.

உடனடியாக என்ன செய்யலாம்?

1. கல்விக்கொள்கையில் இருக்க வேண்டிய அம்சங்களைப் பட்டியலிட வேண்டும்.

2. என்னென்ன தலைப்புகள், என்னென்ன உபதலைப்புகள் (எடுத்துக்காட்டாக முன்பருவக் கல்வி – எப்படி இருக்க வேண்டும், என்ன மாற்றங்கள் வேண்டும்) என நீண்ட பட்டியல் தயாரிக்க வேண்டும்.

3. இந்தத் தலைப்புகளின் கீழ் ஒவ்வொன்றுக்கும் நிலப்பரப்புக்கு ஏற்ப, பள்ளிகளுக்கு ஏற்ப கருத்துக்கள் பகிரப்பட வேண்டும்.

4. கருத்துக்களை தெரிவிக்கும்போது புள்ளி விவரங்களுடன் (Data Points) தெரிவித்தால் இன்னும் வலுவானதாக இருக்கும்.

5. தனி நபர்கள்/ ஆசிரியர்கள் / ஆசிரியர் சங்கங்கள் / கல்வித்தளங்களில் இயங்கும் தன்னார்வ அமைப்புகள் / சிவில் சொசைட்டிகள் என ஒவ்வொருவரும் தாங்கள் இயங்கும் தளத்தின் பார்வையில் இருந்து கருத்துக்களை முன்வைக்கலாம்.

6. பெண் கல்வி, மலைவாழ் குழந்தைகளுக்கான கல்வி, நலிந்த சமூகத்தினருக்கான கல்வி,சிறப்பு குழந்தைகளுக்கான கல்வி, மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய கல்வி, தொழிற்கல்வி என ஒவ்வொரு தரப்பினரின் பார்வையில் இருந்தும் அணுகி இது இவர்களை உள்ளடக்கியதா என உறுதி செய்ய வேண்டும்.

7. மின்னஞ்சல் (stateeducationpolicy@gmail.com) மூலம் கருத்துக்களை பதியலாம், கடிதமாக அனுப்பலாம், நேரிலும் சென்று கோப்பினை பகிரலாம். அலுவலக முகவரி: செண்டர் பார் எக்செலன்ஸ் கட்டிடம், 3வது தளம், களஞ்சியம் கட்டிடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025

8. தமிழகம் எங்கும் மண்டலவாரியாக கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெறுகின்றன. மக்கள் பெருவாரியாக கலந்துகொள்ள வேண்டும், சிவில் சொசைட்டி நிறுவனங்கள் இதைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மக்களை ஒருங்கிணைத்து கருத்துக்களை தெரிவிக்கவும் உதவ வேண்டும். இங்கேகருத்து கூற வரும் மக்களின் எண்ணிக்கையும் எண்ணங்களும் கட்டாயம் கல்விக்கொள்கையை வலுப்படுத்தும்.

கல்விக்கொள்கை என்பது மக்களுக்கானது, அதில் மக்களின் பங்கு அவசியம். கல்விக்கொள்கை பற்றிய புரிதல்களை இந்த சமூகம் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும், பலரின் கரங்கள் இணைய வேண்டும். இணைப்போம்.

கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்

தொடர்புக்கு: umanaths@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x