Last Updated : 04 Aug, 2022 06:08 AM

 

Published : 04 Aug 2022 06:08 AM
Last Updated : 04 Aug 2022 06:08 AM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்: வகுப்பில் தூங்காமல் இருக்க என்ன சாப்பிடலாம்? - ஆலோசனை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர்

சென்னை: குழந்தைகள் வகுப்பில் தூங்காமல் இருப்பதற்கும், சோர்வு நீங்கி ஊக்கமாகவும், உற்சாகமாகவும் படிக்க என்ன உணவு வகைகள், பழங்கள், பானங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆலோ சனை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் டி.கிரிஜா.

சமையல் கலை மற்றும் மாற்று மருத்துவ நிபுணர் கிரிஜா நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: எந்த நோயாக இருந்தாலும், அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுதான் காரணம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சமவிகிதத்தில் இருந்தால் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

பெரும்பாலான உயிரிழப்பு நீர்ச்சத்து குறை பாட்டால்தான் நிகழ்கிறது. அதைத்தடுக்க உடலில்70% தண்ணீரை பராமரித்தாக வேண்டும். அவ்வாறு செய்தால் உடலில் உள்ள கழிவுகள் வியர்வை மற்றும் சிறுநீராக வெளியேறிவிடும்.

குழந்தைகள் தேர்வு எழுதிவிட்டு வந்தால் மிகவும் சோர்வாக இருப்பார்கள். அதுபோன்ற நேரத்தில் முகத்தில் வேகமாக தண்ணீர் தெளிக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கை, கால், முகத்தை கழுவிவிட்டு வரச்சொல்வார்கள். அவ்வாறு செய்தால் கை, கால், முகத்தில் உள்ள வியர்வைத் துவாரங்கள் திறக்கும்.

அன்றாட உணவில் எலுமிச்சை பழம், இஞ்சி, பூண்டு இருக்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு போகும்போது தண்ணீர் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும். அத்துடன் எலுமிச்சை ஜூஸையும் கொடுத்து அனுப்பினால் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும், உற்சாகமாகவும் படிப்பார்கள்.

முதல் நாளே எலுமிச்சை பழ ஜூஸ் தயார் செய்து, அதில் 5 புதினா இலையை போட்டு ப்ரிட்ஜில் வைக்க வேண்டும். மறுநாள் அதனை ஒருபாட்டிலில் கொடுத்து அனுப்ப வேண்டும். இதனால், தெம்பு அதிகரிக்கும், சுறுசுறுப்பாக இருப்பார்கள். வகுப்பறையில் தூங்கமாட்டார்கள். இப்படிஒவ்வொரு நாளும் பானம் கொடுக்கலாம்.

டி.கிரிஜா

இன்னொரு நாள் ஒரு டம்ளர் தண்ணீரில் தர்பூசணியை நறுக்கி போட்டு, புதினா, வெள்ளரிக் காயையும் சேர்த்து ப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அடுத்த நாள்அதை கொடுத்து அனுப்பினால் சோர்வு நீங்கிபுத்துணர்ச்சி தரும்.

தண்ணீரில் வெறுமனே துளசி போட்டுக்கூட கொடுத்து விடலாம்.தண்ணீரில் 5 ஆப்பிள் துண்டுகள், ஒரு கிராம்பு சேர்த்தால்ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் அதிகரிக்கும். உடல் இயக்கத்தையும் சமவிகிதத்தில் இருக்கச் செய்யும். தேர்வு காலங்களில் குழந்தைகளுக்கு இந்த ரெசிபீக்களைக் கொடுத்து அனுப்பினால் உற்சாகமாக தேர்வு எழுதுவார்கள்.

குழந்தைகளுக்கு புரதச்சத்து மிக முக்கியம். காலையில் பள்ளிக்கு செல்லும்போது, அவலை பாலில் கலந்து ஒரு டீ ஸ்பூன் முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு பொடியை கலந்து, நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுத்தால் தெம்பு கிடைக்கும் நிறைவாகவும் இருக்கும்.

மதிய உணவில் 2 காய்கறிகள், ஒரு கீரைஅல்லது ஒரு சாலட் சேர்ப்பது நல்லது. வெள் ளரிக்காயை சிறிது சிறிதாக நறுக்கி, 10 பச்சை வேர்க்கடலை சேர்த்து, அதில், தேங்காய் துருவி போட்டு. உப்பு, மிளகு தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி கலந்து கொடுத்தால் குழந்தைகள் ரசித்துச் சாப்பிடுவார்கள்.

பதற்றத்துடன் படிப்பதால் குழந்தைகளுக்கு வாய்ப்புண், வயிற்று புண் வர வாய்ப்புள்ளது. அதனால் உணவில் தேங்காய், தேங்காய் பால் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தேங்காய் பாலில் பாதாம், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் பொடி, நாட்டுச்சர்க்கரை கலந்தும் கொடுக்கலாம். மாலையில் புரதச்சத்து மிக்க பச்சைப் பயிரை வேகவைத்துச் சுண்டலாக கொடுங்கள். பழங்களை சாப்பிட வைக்கலாம். இவற்றை நொறுக்குத் தீனி யாகவே தரலாம்.

இரவு உணவில் ஒரு அவித்த முட்டை, ஒரு சாலட், ஒரு சப்பாத்தி சேர்த்துக் கொள்வது நலம்.

இவ்வாறு டி.கிரிஜா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x