சென்னைக்கு 3-வது இடம்: வெளிநாட்டு மாணவர்கள் விரும்பும் இந்திய நகரங்கள்
லண்டன்: மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் எனும் கியூஎஸ் தரவரிசைப்பட்டியல் ஜூன் 29 அன்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் மும்பை, பெங்களூரு, சென்னை, டெல்லி ஆகியவை சர்வதேச மாணவர்களுக்கான முதல் 140 நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
வெளிநாட்டு மாணவர்கள் படிக்க விரும்பும் உலக நகரங்களின் கியூஎஸ் தரவரிசைப்பட்டியலில், இந்தியாவின் மும்பை நகரம் 103 வது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பெங்களூரு 114வது இடத்தில் உள்ளது.
அதை அடுத்து சென்னை 125வது இடம். டெல்லி 129 வது இடம். இந்த தரவரிசைப்பட்டியலில் சென்னை, டெல்லி ஆகியஇரண்டு நகரங்கள் புதிதாக இடம்பிடித்துள்ளன. இதனால் இப்பட்டியலில் இணைந்துள்ள இந்திய நகரங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. 2018-19-ம்ஆண்டு உயர்கல்விக்கான அகில இந்திய ஆய்வின்படி,இந்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 47,427 மட்டுமே. ஆனால், 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் 2 லட்சம் சர்வதேச மாணவர்களை ஈர்க்க இந்தியா முயல்கிறது.
கியூஎஸ் சிறந்த மாணவர் நகரங்களின் தரவரிசை என்பது மாணவர்களுக்கான கல்வித்தரம், செலவுகள், வாழ்க்கைத் தரம், பல்கலைக்கழகத்தின் தரம் மற்றும் முந்தைய மாணவர்களின் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த தரவரிசையில் பிரிட்டனை சேர்ந்த லண்டன் நகரம் முதல் இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து தென்கொரியாவின் சியோல் நகரம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஆசிய நகரங்களில் சியோல் முதலிடத்திலும், டோக்கியோ, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும்ஒசாகா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
கியூஎஸ் தரவரிசைப்பட்டியலில் இடம்பெற குறைந்தபட்சம் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நகரமாக இருத்தல் அவசியம். அதுமட்டுமின்றி கியூஎஸ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்பட்டியலிலும் அந்நகரங்களின் இரண்டு பல்கலைக்கழகங்களேனும் இடம்பிடித்திருக்க வேண்டும்.
