Published : 29 Nov 2023 04:30 AM
Last Updated : 29 Nov 2023 04:30 AM

மாணவர்கள் தொன்மையை அறிந்து கொள்ள பள்ளி பாடத்திட்டத்தில் தொல்லியல் அவசியம்

ஒரு இடத்தினுடைய வரலாற்று தொன்மையை அறிந்து கொள்வதில் நமக்கு பேருதவியாக இருப்பவை தொல்லியல் தரவுகளான கற்கருவிகள், உலோகங்கள், பானை ஓடுகள், கீரல்கள், எழுத்து பொறிப்புக்கள், கல்வெட்டுக்கள், நடுகற்கள், கட்டிடக்கலை, சிற்பக்கலையின் நுணுக்கங்கள், நாணயங்கள், செப்பு பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை ஆகும். இவற்றை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு பள்ளிகளில் தொல்லியல் பாடம் ஒரு பிரிவாக கற்பிக் கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு தொல்லியல் பாடத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

தமிழகபள்ளிக்கல்வி துறை ஆசிரியர் களுக்கு தொல்லியல் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துவது பாராட்டுக்குரியது. இந்தப் பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும்போது, அவர்கள் தொல்லியலின் தேவையை மாணவர்களுக்கு கற்பிக்க வாய்ப்பாக அமையும். அதனால் மாணவர்களுக்கு தொல்லியல் மீது ஆர்வம் ஏற்படுவதோடு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை ஆவணப்படுத்துவதற் கும், மறுக்கட்டமைப்பு செய்வதற்கும் பயன்படும்.

மாணவர்கள் நம் நாட்டினுடைய தொன்மையையும், மொழி மற்றும் தொழில்நுட்ப அறிவையும், பல்வேறு கலைகளின் வளர்ச்சி, விவசாய உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, வணிகத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களைஆய்வுக்கு உட்படுத்தி அறிந்து கொள்வது அவசியமானதாகும். மாணவர்கள் கள ஆய்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொல்லியல் தரவுகளைப் (கற் கருவிகள், கல்வெட்டுக்கள், நாணயங்கள்) பற்றிய விவரங்களை விளக்கி தொல்லியல் தரவுகளை சேகரிப்பதற்கு ஊக்கப்படுத்துவது ஆசிரியர்களுடைய இன்றியமையாத கடமையாகும்.

இன்றைய அறிவியல் தொழில் நுட்பங்கள் எந்த வகையில் தொல்லியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்று மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக இன்றைக்கு நம் கைப்பேசியில் இருக்கக்கூடிய ஜிபிஎஸ் கருவியினுடைய பயன்பாடு, அதை எப்படி தொல்லியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கற்பிப்பது, ட்ரோன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) போன்ற கணினி தொழில்நுட்பங்களை, தொல்லியல் ஆய்வுகளை மேம்படுத்துவதில் கையாள்வது போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

தொல்லியல் கல்வி, வரலாறு மற்றும் தமிழ் மொழி பாடத்தில் ஒரு பிரிவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு பாடப்பிரிவுகளான அறிவியல், சமூக அறிவியல், கணினி உள்ளிட்ட பாடப்பிரிவுகளிலும் தொல்லியல் தொடர்பான தகவல்கள் சேர்க்கப்பட்டு, அவை எந்த வகையில் தொல்லியல் தரவுகளை ஆய்வு செய்வதற்கு பயன்படுகின்றன என்பதை மாணவர்களுக்கு விளக்கி கூற வேண்டும். இதனால் மாணவர்கள் வரலாற்றை மறுகட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு வரலாற்று உண்மைகளையும், தொன்மையின் பழம் பெருமைகளையும் எடுத்துச் சொல்வார்கள்.

மாணவர்களுக்கு தொல்லியல் தொடர்பான நூல்களை அறிமுகப் படுத்தி, வாசிக்க செய்து அவர்களின் ஐயங்களுக்கு விளக்கமளிப்பதுடன், அவர்கள் தொல்லியல் தரவுகளின் விவரங்களை அறிந்து தெளிவு பெறுவதற்கு முயற்சி எடுக்க வேண்டியது ஆசிரியருடைய கடமை யாகும். அது தொல்லியல் தரவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வதற்கும், பாதுகாப்பதற்கும், ஆவணப்படுத்துவதற் கும் ஒரு வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரும் என்பதில் ஐய மில்லை.

தமிழக பள்ளிகளில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் வாயிலாக மாணவர்களுக்கு தொல்லியல் தொடர்பான பயிற்சி அளிக்கும் பணியை தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் வரலாற்று உண்மையை வெளிக்கொண்டு வரும் ஆர்வத் தோடு செயல்படுகின்ற மாணவர்கள் கண்டறியும் தொல்லியல் தரவு களை ஆய்வு செய்து, அவற்றினுடைய முக்கியத்துவத்தை உடனடியாக மக்களுக்கு தெரியப் படுத்தி, மாணவர்களை உற்சாகப் படுத்துவதுடன், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அவர்களை பாராட்டும்போது அவர்களுக்கு இன்னும் வரலாற்று ஆய்வில் ஆழங்கால் பட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இதை அரசு தொடர்ந்து செய்ய வேண்டும்.

- கட்டுரையாளர் உதவிப் பேராசிரியர் (தொல்லியல்) தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை, தொடர்புக்கு: initnou@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x