வளர்ச்சியை வழிநடத்திய அறிவியல் கொள்கைகள்

வளர்ச்சியை வழிநடத்திய அறிவியல் கொள்கைகள்
Updated on
1 min read

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிப்போக்கை, நான்கு முதன்மையான அறிவியல் தொழில்நுட்பக் கொள்கைகள் வழிநடத்தின. அவை, அறிவியல் கொள்கைதீர்மானம் [Scientific Policy Resolution (SPR) – 1958], தொழில்நுட்பக் கொள்கை அறிக்கை [Technology Policy Statement (TPS) - 1983], அறிவியல் - தொழில்நுட்பக் கொள்கை [Science and Technology Policy (STP) –2003], அறிவியல், தொழில்நுட்பம் - புத்தாக்கக் கொள்கை [Science, Technology and Innovation Policy (STIP) – 2013] ஆகியவை.

1958இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கம் வரைவு செய்த முதல்அறிவியல் கொள்கை, இந்தியாவில் அறிவியல் மனோபாவத்துக்கு (scientific temper)அடிக்கல் நாட்டியது. அறிவியல் தொழில்நுட்பத்துக்கான முதலீடுகளே மக்கள் நல அரசைஉருவாக்கும் என்ற அறிதலில் இருந்து இந்தக்கொள்கை பிறந்தது. ஆக, அறிவியல் தொழில்நுட்பம் சமூக-பொருளாதார மாற்றத்துக்கான கருவியாக மாறியது.

முதல் அறிவியல் கொள்கையின் விளைவாக, அடுத்த 30 ஆண்டுகளில் வலுவான அறிவியல் அடித்தளம் இந்தியாவில் அமைந்தது. 1980-களில் புதிய துறைகளாக அறிமுகமான தரவு, மின்னணுவியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றின் தொழில்நுட்ப அடித்தளத்தை வலுப்படுத்தக் கோரியது, இரண்டாவது அறிவியல் கொள்கை.

சமச்சீரான, நீடித்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவானது மூன்றாவது கொள்கை. சமூக-பொருளாதார முன்னுரிமைகளில் அறிவியல், தொழில்நுட்ப இணைவு புத்தாக்கச் சூழலை உருவாக்கும் அம்சங்களைக் கொண்டிருந்த நான்காவது கொள்கை,LIGO, LHC – CERN, ITER, SKA போன்றஉலகளாவிய பெரும் அறிவியல் முன்னெடுப்புகளில் இந்தியாவின் பங்கெடுப்பை அதிகரித்தது. தேசிய அறிவியல், தொழில்நுட்பம் - புத்தாக்கக் கொள்கை என்று பெயரிடப்பட்டிருக்கும் ஐந்தாவது அறிவியல் தொழில்நுட்பக் கொள்கையின் வரைவு தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in