

டிஜிட்டலில் போலியாக அரவணைத்து மோசடி செய்யும் நபர்களைப் பற்றிக் கடந்த வாரம் பார்த்தோம். அத்தகையவர்கள் உளவியல் ரீதியாக மக்களிடம் பேசி கவருவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் பயன்படுத்தும் உத்தி சோஷியல் எஞ்சினியரிங் (Social engineering) அல்லது ஹேக்கிங் ஹியூமன் (Hacking Human) எனப்படுகிறது.
இப்படி சிறுவர்களை குறிவைத்து மூளை சலவை செய்ய அவர்கள் பயன்படுத்த அடுத்த உத்தி தகவல் சேகரிப்பு. இத்தகையோரிடம் சிறார் எவ்வளவு தகவல் கொடுக்கிறார்களோ அவ்வளவு ஆபத்து. பொதுவாக இந்த மோசடி நபர்கள் முதலில் ஆணா? பெண்ணா? என்ன வயது? எந்த மாதிரியான குடும்பச் சூழல்? போன்ற தகவல்களை தெரிந்து கொள்வார்கள்.
சாட் எனும் வலை: இவர்கள் பெரும்பாலும் தங்கள் அடையாளம் வெளிப்படாத ரகசியம் காக்கக் கூடிய ஆன்லைன் தளங்களில்தான் புழங்குவார்கள். சமூக வலைத்தளங்களில் போலிப்ரொபைல் மூலம் மிக எளிதாகச் சிறுவர்களை ஏமாற்றிவிடுவார்கள். பெரும்பலும் சாட் மூலம்தான் இவர்கள் வருவார்கள்.
அடுத்து ஆன்லைன் வீடியோ கேம்கள் விடையாட உங்களை அழைப்பார்கள். இப்போதெல்லாம் ஆன்லைன் வீடியோ கேம்களில் ‘பில்ட் இன் சாட்’ வசதிகள் உள்ளது. நீங்கள்வீடியோ கேம் விளையாடிக் கொண்டே உங்கள் நண்பர்கள் குழுவுடன் பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் விளையாட்டைத் தொடரலாம்.
பெரும்பாலும் ஒருவரின் அடையாளம் இன்னொருவருக்குத் தெரியாது. இதுதான் இந்த மோசடி நபர்கள் வலம் வரும் இடம். அதிக நேரம் ஆன்லைனில் இருக்கும் சிறுவர்கள், பெண்களைதான் இவர்கள் முதலில் குறிவைப்பார்கள். அதிக நேரம் ஆன்லைன் என்பதே தனிமையில் இருப்பதை உணர்த்தும் நல்ல க்ளு.
சரி. இவர்களிடம் நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?
# முதலாவதாக, இப்படிப்பட்ட மோசடி நபர்கள் இணையத்தில் உலாவுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது.
# அடுத்து இணையத்தில் நம்மிடம் பேச முயலும் அறிமுகமில்லாத நபர்களின் மேல் ஒரு சந்தேகத்துடன் கவனமாக கையாளுங்கள்.
# அறிமுகம் இல்லாத நபரிடம் உங்கள் தகவலைத் தவிர்க்கலாம்.
# பெற்றோரிடம் உங்கள் ஆன்லைன் நடவடிக்கைகளைத் தெரிவிப்பது.
# சந்தேகம் ஏற்பட்டால் ப்ளாக் செய்யத் தயங்க வேண்டாம்.
(தொடர்ந்து பேசுவோம்)
- கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்; தொடர்புக்கு: write2vinod11@gmail.com