கையருகே கிரீடம் - 17: பிளஸ் 2 முடித்ததும் கடற்படை அதிகாரி ஆகலாம்!

கையருகே கிரீடம் - 17: பிளஸ் 2 முடித்ததும் கடற்படை அதிகாரி ஆகலாம்!
Updated on
2 min read

பளிச்சென வெண்ணிற சீருடையில் மிடுக்காக போர்க்கப்பலில் பயணிக்கும் இந்திய கடற்படை அதிகாரிகளை ஊடகங்களில் பார்த்திருக்கலாம். ஆழ்கடலில் மிதக்கும் விமானம் தாங்கிக் கப்பல்கள், ஆயுதம் சுமந்த போர்க்கப்பல்கள், கடலடியில் தேசம் காக்கும் நீர்மூழ்கிகள் எனப் பல தளங்களில் களமாடும் கடற்படையில் நீங்களும் அதிகாரி ஆகலாம். கடற்படை அதிகாரி ஆவது எப்படி? பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பிளஸ்2 படித்தவர்களும் இந்திய கடற்படையில் அதிகாரி ஆகலாம். அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன.

1. என்டிஏ நுழைவுத் தேர்வு: ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி), தேசிய பாதுகாப்புப் பயிற்சிப்பள்ளியில் (National Defence Academy -NDA) சேருவதற்கான என்டிஏ நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வு, ராணுவம், கடற்படை, விமானப்படைகளில் அதிகாரியாக சேருவதற்கான பொதுவான நுழைவுத் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நுழைவுத் தேர்வின் மூலம் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப்படைகளில் விமானியாகவும் பணியாற்ற வாய்ப்பு உண்டு.

கல்வித் தகுதி: பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல் கணிதத்தை படித்திருப்பது கடற்படை அதிகாரியாக சேருவதற்கான அடிப்படைத் தகுதி ஆகும். வயது வரம்பு: 16.5 ஆண்டுகள் முதல் 19.5 ஆண்டுகள் வரை.

தேர்வு முறை: யூபிஎஸ்சி நடத்தும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் எஸ்எஸ்பி (Services Selection Board-SSB) நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமின்றி படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் மாணவிகள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி: பூனேவில் உள்ள என்.டி.ஏ (NDA) நிறுவனத்தில் மூன்றாண்டுகள் பயிற்சியும், கேரளாவின் எழிமலா என்ற இடத்திலுள்ள இந்திய கடற்படைப் பயிற்சிப்பள்ளியில் (Indian Naval Academy –INA) ஓராண்டு பயிற்சியும் வழங்கப்படும். இந்த பயிற்சிகளுக்குப் பின் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பி.டெக்., பட்டம் வழங்கப்படும் என்பது கூடுதல் செய்தி.

யூபிஎஸ்சி நடத்தும் என்டிஏ நுழைவுத் தேர்வின் மூலம், எழிமலா-ஐஎன்ஏ பள்ளிக்கும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பித்தவர்கள், யூபிஎஸ்சி தேர்வு மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்ற பின்பு நான்கு ஆண்டுகள் எழிமலா ஐஎன்ஏ-வில் பயிற்சி உண்டு. பயிற்சியின் முடிவில் கடற்படை அதிகாரிகளாக பணியமர்த்தப்படுவார்கள். பி.டெக் பட்டமும் வழங்கப்படும்

2. நேரடி ஐ.என்.ஏ நுழைவு: பிளஸ் 2 முடித்தவர்கள் கடற்படையில் அதிகாரியாக இன்னொரு வழியும் உண்டு. அதாவது நேரடியாக ஐஎன்ஏ-வில் சேருவது. இந்த முறைக்கு 10 2 (B.Tech) நுழைவு என்று பெயர். இதில் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை பிளஸ் 2-ல் படித்திருப்பது கட்டாயம். மேலும் பிளஸ் 2-வில் 70 சதவீத மதிப்பெண்களோடு, ஜே.ஈ.ஈ –முதன்மைத் தேர்வில் (JEE-Mains) பங்கேற்றிருப்பதும் அவசியம். 10-வது அல்லது பிளஸ் 2-வில் ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம். வயது வரம்பு, 17 ஆண்டுகள் முதல் 19.5 ஆண்டுகள் வரை ஆகும்.

தேர்வு முறை: தனியாக எழுத்துத் தேர்வு இல்லை. ஜே.ஈ.ஈ –முதன்மைத் தேர்வின் அகில இந்திய தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் எஸ்.எஸ்.பி நேர்முகத் தேர்வு நடத்தப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு, நான்கு ஆண்டுகள் ஐ.என்.ஏ-வில் பயிற்சியும் பி.டெக் பட்டமும் உண்டு. பயிற்சியின் முடிவில் கடற்படை அதிகாரிகளாக பணியமர்த்தப்படுவார்கள்.

கடற்படையில் சேர்ந்து தேசப்பணியாற்ற துடிப்புள்ள மாணவ, மாணவிகள் இந்த தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in, www.ina.gov.in ஆகிய வலைதளங்களைப் பார்வையிடவும். ஆண்டுக்கு இரு முறை இந்த இரண்டு தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. திரை கடலோடி தேசம் காக்க வாழ்த்துகள்! - (தொடரும்) கட்டுரையாளர், ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: dilli.drdo@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in