கையருகே கிரீடம் - 15: நாய்ப்பாசம், நல்ல வேலை தரும்!

கையருகே கிரீடம் - 15: நாய்ப்பாசம், நல்ல வேலை தரும்!
Updated on
2 min read

உங்களுக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியமா? தெருவில் நடக்கும்போது நாய்களை பரிவுடன் பார்ப்பவரா நீங்கள்? நாய்கள் மீதான உங்கள் அன்பு உங்களுக்கு மாத வருமானம் தரும். நாய்கள் நன்றியுள்ளவை என்பதைத் தாண்டி அவைகளின் சமுதாயப் பங்களிப்பு விரிந்துபட்டது. தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சமீபக் காலங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு, தீவிரவாத செயல் தடுப்பு ஆகிய வேலைகளில் நாய்களை மிஞ்ச ஆளில்லை. அவைகளால் காப்பாற்றப்படும் மனித உயிர்கள் மிக அதிகம்.

போதைப்பொருள் தடுப்பு, ரோந்துப் பணி என காவல்துறை / பாதுகாப்புத்துறை சார்ந்த பணிகளிலும் நாய்களின் பங்களிப்பு மிகுதியானது. பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீரழிவுகளின் பாதிப்புகளில் உயிருடன் சிக்குண்ட மனிதர்களை மீட்பதிலும் நாய்களின் சேவை மெச்சத்தக்கது. நிலத்தில் மட்டுமன்றி நீர்நிலைகளிலும் நீந்தி நீரில் சிக்குண்ட மனிதர்களை கண்டறியும் திறன் நாய்களுக்கு உண்டு.

மனிதர்களுக்கு உதவி: வீட்டில் செல்ல பிராணியாக மனிதர்களோடு அன்போடு பழகி வீட்டுக்காவல் பணி செய்பவை நாய்கள். அதையும் தாண்டி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், தனியாக வாழும் வயதானவர்களுக்கு நாய்களின் துணை ஒரு சிகிச்சையாகவே பார்க்கப்படுகிறது. மனித உடலியல் மாற்றங்களை வைத்து மாரடைப்பு உள்ளிட்டவற்றை முன்னறியும் திறன் நாய்களிடம் இருப்பதாக நம்பப்படுகிறது.

நாய்களைச் சார்ந்த வணிகச்சந்தை: இந்தியாவில் வளர்ப்பு நாய்களின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 3 கோடியை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவில் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுச் சந்தையின் மொத்த மதிப்பு ஏறக்குறைய 4,000 கோடி ரூபாய் என 2021-ல் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பங்கு நாய்களின் உணவு சார்ந்தது. காவல்துறை, பேரிடர் மீட்புப்படை, எல்லைபாதுகாப்புப்படை, ராணுவம் என பல அமைப்புகளிலும் நாய்கள் அங்கம் வகிக்கின்றன.

வேலைவாய்ப்பு: மேலே குறிப்பிட்ட எல்லா பணிகளையும் நாய்கள் செய்ய பயிற்சி தேவை. வீட்டு நாய்களிலிருந்து ராணுவ நாய்கள் வரை பயிற்சியாளர்களுக்கான பெரிய தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் மாதச்சம்பளம் பெறும் நாய் பயிற்சியாளர்கள் (Dog Trainers) உண்டு. மென்பொருள் நிறுவனங்களில் பொறியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க பயிற்சியளிக்கப்பட்ட நாய்களோடு அவர்கள் நேரத்தைசெலவிடும் சிகிச்சை முறை இந்தியாவில் பெருக ஆரம்பித்திருக்கிறது. ஆக நகரத்துவீடுகள், பன்னாட்டு நிறுவனங்கள், பாதுகாப்பு படை என நாய் பயிற்சியாளர்களுக்கான தேவை பெருகி உள்ளது.

கல்வித்தகுதி / பயிற்சி: நாய் பயிற்சியாளர்/ நாய் பழக்குனர் (Dog Behaviourist) ஆக என்ன செய்ய வேண்டும். இதற்கு எந்த குறிப்பிட்ட கல்வித்தகுதியும் தேவையில்லை. வாடிக்கையாளர்களோடு உரையாடுவதற்கு ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் தெரிந்திருப்பது நல்லது. நாய் பயிற்சியாளராக சிறப்புப் பயிற்சிகள் உண்டு. இந்த சான்றிதழ் பயிற்சிகளில் வகுப்பறை போதனையும் களப்பயிற்சிகளும் உண்டு. பயிற்சிகளில் பல படிநிலைகள் உண்டு. சென்னையில் உள்ள வுட்ஸ்டாக் நாய் பயிற்சிப்பள்ளியும் (Woodstock Dog Training School), கொச்சியிலுள்ள நாய் பயிற்சிப்பள்ளியும் (Cochin Dog Training Academy) ஆகியவை முக்கிய தென்னிந்திய தனியார் பயிற்சிப்பள்ளிகளாகும். காவல்துறையிலும், பாதுகாப்புத் துறையிலும் பயிற்சிப் பள்ளிகள் உண்டு. நாய்களை நேசிப்பவர்கள் அவைகளைச் சார்ந்த நாய் பயிற்சியாளர் பணியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். புதியன விரும்பு!

(தொடரும்)

கட்டுரையாளர், ‘அடுத்த கலாம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in