Published : 08 Aug 2022 06:38 AM
Last Updated : 08 Aug 2022 06:38 AM

டிங்குவிடம் கேளுங்கள் - 6: பட்டத்துக்கு வால் அவசியம் வேண்டுமா?

பட்டத்துக்கு வால் அவசியம் வேண்டுமா, டிங்கு?

- கே. பவித்ரா, 6-ம் வகுப்பு, ராணி லட்சுமிபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.

வால் இல்லாமலும் பட்டம் பறக்கும். ஆனால், வாலு டன் பட்டம் பறக்கும்போது அதிகமாகக் காற்றில் அலைக்கழிக்கப்படாது. பட்டத்துக்குச் சமநிலையைக் கொடுக்கும். வாலின் நீளமும் எடையும் அதிகரிக்க அதிகரிக்க பட்டம் நன்றாகப் பறக்கும். பட்டத்தின் நீளத்தைப் போல் மூன்று முதல் எட்டு மடங்கு வரை நீளமான வாலை வைத்துக்கொள்ளலாம், பவித்ரா.

மழை வரும்போது மயில் தோகையை விரித்து ஆடுவது ஏன்?

- எம். உதய கலா, 7-ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

மழை வரும்போது மட்டும்தான் மயில் தோகையை விரித்து ஆடும் என்றெல்லாம் பல நூற்றாண்டுகளாக மக்கள் நம்பி வருகிறார்கள். ஆனால், இது உண்மை அல்ல. ஆண் மயில் குடும்பம் நடத்துவதற்காகத் தன் அழகிய தோகையை விரித்து, பெண் மயிலை அழைக்கிறது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இனப் பெருக்க காலம். அந்தக் காலக்கட்டத்தில் அடிக்கடி ஆண் மயில்கள் தோகையை விரிப்பதைப் பார்க்கலாம். அப்போது தற்செயலாக மழையும் பெய்திருக்கலாம், உதய கலா.

விரலில் ரத்தம் வந்தால் வாயில் வைத்து உறிஞ்சுவது ஏன்?

- த. சுந்தர பிரகாஷ், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம்.

ரத்தம் உயிர் காக்கும் அரிய திரவம் என்பதால், ரத்தத்தை வீணாக்கக் கூடாது. வாயில் வைத்துச் சப்பினால் ரத்தம் வெளியேறுவது நிற்கும் என்றும் நினைக்கிறார்கள். வாய்க்குள் குளிர்ச்சியான எச்சில் பட்டவுடன் ரத்தம் நின்றுவிடும்.

சுத்தமான வாயாக இல்லாவிட்டால், காயத்தின் வழியே தொற்று ஏற்படக்கூடும். அதனால் தண்ணீரில் கையை நனைக்கலாம்.

விரைவில் ரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். காயம்பட்ட இடத்துக்கு அருகில் இறுக்கமாகப் பிடித்தாலும் ரத்தம் வெளியேறுவது நின்றுவிடும்.

அதனால் வாயில் வைத்து உறிஞ்ச வேண்டியதில்லை. இன்னொரு விஷயம், இப்படி வெளியேறும் ரத்தத்தை உறிஞ்சுவதால், அது ரத்தத்துடன் போய்ச் சேர்வதும் இல்லை, சுந்தர பிரகாஷ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x