கதை கேளு கதை கேளு 1: மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ன?

யெஸ்.பாலபாரதி
யெஸ்.பாலபாரதி
Updated on
2 min read

ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் பாதுகாப்பு உணர்வைத் தந்துகொண்டுதான் இருக்கின்றனர். அதையும் தாண்டி குழந்தையின் பாதுகாப்புணர்வை பலப்படுத்தக் குழந்தைகளின் அருகிலேயே இருக்க, பெரிய பெரிய பொம்மைகளைப் பரிசாக தருகிறோம்.

1970, 80-களில் பிறந்தவர்களுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்தில் மரப்பாச்சி பொம்மைகளே உற்ற தோழியாக இருந்தன. மரப்பாச்சி பொம்மையை குழந்தைகளிடம் விளையாடத் தந்தது அறிவியல் பார்வையுடனான செயல்.

ஏன்? எப்படி? என்பதை மரப்பாச்சி சொன்ன ரகசியம் புத்தகம் நமக்கு விளக்கும். பார்பி பொம்மைகளுடனான தற்போதைய தலைமுறையினரில் ஒருவளான ஷாலினிக்கு, அவளுடைய பாட்டி, தான் சிறுவயதில் விளையாடி மகிழ்ந்த மரப்பாச்சி பொம்மையை பரிசாகத் தருகிறார்.

பேசும் பொம்மை!

மரப்பாச்சி பொம்மை ஷாலினி தனியாக இருக்கும்போது, பேசத் தொடங்குகிறது. பொம்மை பேசுவதைப் பார்த்து முதலில் அச்சமடையும் ஷாலினி, மரப்பாச்சியின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்கிறாள். பொம்மை பேசுகிறதா? ஆமாம். நாம் கற்பனையில் கதைகளில் பார்த்த ஒன்றுதானே! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், மரப்பாச்சி மற்றும் ஷாலினியின் நட்பு மலர்கிறது.

ஷாலினியின் உடன்பயிலும் பூஜாவுக்கு வெளிப்படையாகச் சொல்ல இயலாத ஏதோ ஒரு பிரச்சினை. அத்தகைய சூழலில் மரப்பாச்சி பொம்மை தைரியத்தையும், ஆறுதலையும் தந்து பூஜாவைப் பேசவைக்கிறது.

மனக்குழப்பத்தால் தெளிவின்றி, அதிர்ந்துபோயிருக்கும் பூஜாவுக்கு யதார்த்தத்தை சொல்லி அம்மா, அப்பாவிடம் வெளிப்படையாகப் பேச வேண்டியதன் அவசியத்தைப் புரியவைக்கிறது மரப்பாச்சி. பூஜாவின் பிரச்சனை தீர்கிறது.

மரப்பாச்சி என்ன ரகசியம் சொன்னது?

எந்த ரகசியமும் சொல்லவில்லை. மாறாகஒவ்வொரு குழந்தையிடமும் அதன் பெற்றோரும், பெற்றோரிடம் குழந்தைகளும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளவேண்டிய அவசியத்தை பூஜாவின் கதாபாத்திரம் வழி புத்தகத்தின் ஆசிரியர் பேசியிருக்கிறார். நாள்தோறும் எண்ணற்ற குழந்தைப் பாலியல் சீண்டல்கள் குறித்தான செய்திகளை நாளேட்டில் படிக்கிறோம்.

மனம்விட்டு பேசுகிறோமா?

குழந்தையின் இத்தனை மனக் கஷ்டமும் எப்படி பெற்றோருக்குத் தெரியாமல் இருக்கும், குழந்தையின் அன்றாடச்செயல்பாடுகளை பெற்றோர் கவனிக்கமாட்டார்களா என்றெல்லாம் நாளேட்டை படிப்பவருக்குத் தோன்றும்.

அடிப்படைப் பிரச்சினையே பெற்றோரும் குழந்தைகளும் மனம்விட்டு பேசிக் கொள்ளாததே. மரப்பாச்சி இந்த தகவலைத்தான் நமக்கு சொல்கிறது. தனக்கு பிடித்தவருடன் மட்டும் பேசவும், விளையாடவும் செய்யுமாம் மரப்பாச்சி. ஷாலினியுடன் பேசி விளையாடி மகிழ்ந்திருந்த மரப்பாச்சி, ஒருநாள் அவளை விட்டுப் பிரிகிறது. ஏன் பிரிகிறது? எப்படி அந்தத் துன்பத்தை ஷாலினி பொறுத்தாள் என்பதை இந்த சிறுநாவலைப் படித்துப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

இந்தக் கதையை குறும்படமாக எடுக்கவேண்டிய தேவையும் உள்ளதாக தோன்றுகிறது. ஏனெனில் ஆர்வமூட்டும் கதாபாத்திரங்கள் வழி, சமுதாய விழிப்புணர்வை விதைக்கும் இந்தச் சிறிய நாவல், வாசிக்க அறியாதவரிடத்தும் காணொலியாகச் சென்று சேர வேண்டும். குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்பவர்கள், குழந்தையை பயமுறுத்தி வைக்கிறார்கள். அதனால் குழந்தை தனக்கு நடந்ததை வெளியே சொல்ல யோசிக்கிறது.

குழந்தையுடன் பேச நேரம் ஒதுக்காத பெற்றோரின் பிள்ளைகளும், தனக்கு நடைபெறும் துன்பத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். வாசிக்கத் தெரிந்த எல்லாக் குழந்தைகளுமே மரப்பாச்சி சொல்லும் ரகசியத்தை படித்தால், தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வழியை அறிவார்கள்.

சில ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாலியல் சீண்டல் குறித்தும், பாதுகாப்பான தொடுதல் எது எனவும், குழந்தையுடன் பேச அச்சப்படலாம். குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்ற மூவரும் சமுதாயத்தின் வேர்கள். நாளைய விழுதுகள். சிறு வயது மனக்காயத்தால் சில குழந்தைகளின் வேர்களில் நஞ்சு இறங்கியிருக் கும். வந்த பின்னர் காப்பதை விட, வரும் முன்னர் காப்பதே சிறந்தது.

ஒவ்வொருவர் இல்லத் திலும் மரப்பாச்சி சொல்லும்ரகசியத்தை கேட்டுவிட்டால், நாம் ரகசியமாய் மறைத்துக்கொள்ள எந்த நிகழ்வும் இல்லாமல் போகும். ’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ புத்தகத்தில், பெட்டிச் செய்திகளாய் சில அரிதான ஆர்வமூட்டும் செய்திகள் உள்ளன. மரப்பாச்சியுடன் பேசிப் பார்க்கிறீர்களா நீங்களும்!

கட்டுரையாளர்:குழந்தை நேய செயற்பாட்டாளர்,பள்ளி ஆசிரியை, காஞ்சிபுரம்.

சிறந்த சிறார் இலக்கியங்களின் சுருக்கம் ’கதை கேளு கதை கேளு’ பகுதியில் இடம்பெறும்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in