

பொதுவாக, குளிர் காய்ச்சலுடன் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு, மருந்துகள் மட்டுமன்றி போதிய தண்ணீரும் எளிதாகச் செரிமானமாகும் உணவு வகைகளும், குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்களும் மிகவும் அவசியம். அத்துடன் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் மாஸ்க் அணிவதும், வயதானவர்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்கள் உள்ள வீடுகளில் நோயைக் கட்டுப்படுத்த வேண்டி, மருத்துவர் பரிந்துரையுடன் ஆஸல்டமிவிர் மருந்தினை (chemoprophylaxis) உட்கொள்வது நலம்.
இறுதியாக, இந்த நோய் வராமலே தடுக்க முடியுமா என்றால், அதற்கு உதவுபவை தான் தடுப்பூசிகள். ஃப்ளூ தடுப்பூசிகளை பருவமழைக் காலம் வரும் முன்னரே, அதாவது செப்டம்பர் மாதத்திற்கு முன்னரே போடுவது நல்லது. மேலும் ஃப்ளூ வைரஸும் கரோனா போலவே ஒரு ஆர்என்ஏ வைரஸ் தான். அதாவது, இந்த வகை வைரஸ்கள் தம்மைத் தாமே மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை (antigenic drift) என்பதால் அவற்றுக்கான தடுப்பூசியை, Category B வகையினருக்கு மட்டும் வழங்க அரசு அறிவுறுத்துகிறது.
மற்ற அனைவருக்கும், பொது விதிகளான உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது, கூட்ட நெரிசல்களைத் தவிர்ப்பது, மாஸ்க் அணிவது, நோய் அறிகுறிகள் இருந்தால் பரவாமல் இருக்க தனிமைப்படுத்திக் கொள்வது ஆகியன தான் சிறந்த தடுப்பு முறைகள் என்பது நமக்குப் புரிகிறது.
நவீனின் அம்மாவுக்கும், மற்ற நம் அனைவருக்குமான காய்ச்சல் செய்தி என்னவென்றால், காய்ச்சல் என்பது ஒரு நோய் அறிகுறி மட்டுமே. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது நோய்த்தொற்றுகள். குறிப்பாக இப்போது ஃப்ளூ. இதில் அச்சப்படத் தேவையில்லை என்றாலும், நோய் பரவாமல் இருக்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினாலே இந்த பத்தாம் வகுப்புத் தேர்வு மட்டுமல்ல, மற்றஅனைத்திலும் அனைத்தும் நவீன் உள்ளிட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கைகூடும் என்பதே உண்மை. புரிதலுடன் ஆரோக்கியம் காப்போம்.
(ஆலோசனைகள் தொடரும்)
- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com