முத்துக்கள் 10 - மனநல ஆலோசனை அளித்த போதகர் ஆன்டனி டி மெல்லோ

முத்துக்கள் 10 - மனநல ஆலோசனை அளித்த போதகர் ஆன்டனி டி மெல்லோ

Published on

உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும், மனநல ஆலோசகருமான ஆன்டனி டி மெல்லோ (Anthony de Mello) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# பம்பாயில் (1931) பிறந்தவர். சிறு வயது முதலே மதக் கல்வி பெற்றவர், பம்பாயில் உள்ள சொசைட்டி ஆஃப் ஜீசஸ் அமைப்பில் சேர்ந்தார். பாதிரியாருக்கான பயிற்சியில் இணைந்தார். பம்பாய் மாகாண கிறிஸ்தவ தேவாலய உறுப்பினராகவும் செயல்பட்டார்.

# தொடக்கத்தில், பிற மதங்கள் பற்றி அறிந்துகொள்வதில் இவருக்கு விருப்பம் இல்லை. 1970-களில் தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, மற்ற மதங்களில் உள்ள நல்ல கருத்துகளை அறிவதில் ஆர்வம் காட்டினார்.

# ‘விபாஸனா’ என்ற தியானப் பயிற்சி குறித்து அறியும் முனைப்புகளில் ஈடுபட்டார். அது, இவரது ஆன்மிக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. புத்த, இந்து மதக் கோட்பாடுகள் குறித்தும் அறிந்தார். பல ஆன்மிக விஷயங்கள் குறித்து ஆராய்ந்தார். ‘சாதனா ஏ வே டு காட்’ என்ற இவரது முதல் நூல் 1978-ல் வெளிவந்தது.

# கிழக்கத்திய மத சிந்தனைகள், நவீன உளவியலை ஒருங்கிணைத்து புதிய தியான உத்திகளைக் கற்றுக்கொடுத்தார். மனிதர்கள் தங்கள் உணர்வுகள், உணர்ச்சிகள், சிந்தனைகள், முக்கியமாக தங்கள் மனம் குறித்து நன்கு உணர்ந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

# துன்பத்தில் வாடியவர்களுக்கு உளவியல்ரீதியாக ஆலோசனைகள் கூறி அவர்களது மனக்குறைகளைப் போக்கினார். வாழ்க்கையை முழுமையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க வழிகாட்டும் பயிலரங்குகளை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

# மக்கள் இவரை தலைசிறந்த பேச்சாளராகப் போற்றினர். நல்ல எழுத்தாளராகவும் பரிணமித்தார். கிறிஸ்தவம், புத்த மதம், யோக தத்துவம் பரிந்துரைத்த ’பிராணாயாமம்’ (மூச்சுப் பயிற்சி) மற்றும் வாழ்க்கை குறித்த உளவியல் சார்ந்த சிந்தனைகள் இவரது எழுத்துகளின் அடிநாதமாக இருந்தன.

# இந்தி, தமிழ், வங்காளம் மட்டுமின்றி உலகின் பல மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஸ்பெயின், ஜப்பான், சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து உட்பட உலகம் முழுவதும் அவை புகழ்பெற்றன. ஆன்மிகத் தேடலில் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார்.

# பாதிரியாரான இவர், பாரம்பரிய முறையில் அல்லாமல், புதுமையான அணுகுமுறையைக் கையாண்டதால் அதிகம் பிரபலமானார். அதேநேரம், மதவாதிகளின் எதிர்ப்புகள், கண்டனங்களுக்கும் ஆளானார்.

# ஒரு மதத்தை சேர்ந்த ஆன்மிகவாதி தன்சுயத்தையும், தன் மதத்தையும் இழக்காமலே பிற மதத்தின் சிறந்த அம்சங்களை தன் ஆன்மிகத் தேடலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார். புனேயில் பாஸ்டோரியல் கவுன்சலிங் அமைப்பை 1972-ல் தொடங்கினார். பின்னர் இது‘சாதனா இன்ஸ்டிடியூட் ஆஃப் பாஸ்டோரியல் கவுன்சலிங்’ என்று மாறியது.

# ஆன்மிக சேவை, எழுத்து, தியானம், மனநல ஆலோசனை என இறுதிவரை சுறுசுறுப்பாக செயலாற்றிய ஆன்டனி டி மெல்லோ, 1987-ல் நியூயார்க் சென்றிருந்தபோது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அப்போது இவருக்கு வயது 56. இவரது ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பு ‘ஒன் மினிட் விஸ்டம்’ என்ற தலைப்பில் இவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in