

போக்குவரத்து சிக்னலில் பேருந்திலோ வாகனத்தில் செல்லும்போது காத்திருந்ததுண்டா? சில இடங்களில் 30 விநாடிகள் என்று இருக்கும், சில சிக்னல்களில் 45 விநாடிகள் என்று இருக்கும். ஏன் எல்லா இடத்திலும் ஒன்று போலவே இருப்பதில்லை?
இன்னும் பெருநகரங்களில் 100 விநாடிகள்கூட இருக்கும். ஒவ்வொன்றும் கணக்கிடப்பட்டவை. எப்படி இந்த எண்ணிக்கைக்கு வருகின்றார்கள்? இதுவும் ஒரு சுவாரஸ்யமான கணக்குதான். மிகச்சரியாக கணக்கிட வேண்டும்.
குறிப்பிட்ட சிக்னலில் எவ்வளவு வண்டிகள் கடக்கின்றன, எத்தனை பக்கத்திலிருந்து வாகனங்கள் வரும், எது பீக் ஹவர் இவை எல்லாமே பதிவு செய்யப்பட்டு அதிலிருந்தே சின்கலில் காட்டும் எண்ணிற்கு வருவார்கள். கூடுதலான விநாடிகள் வைத்தால் யாருமேகடக்கவில்லை என்றாலும் நீண்ட நேரம் காத்திருக்கும்படி நிற்க நேரும். குறைவான விநாடிகள் வைத்தால் நெரிசல் அதிகரிக்கும்.
ஒரு சிக்னல் இருக்கிறது. அதில் சுமார்100 வாகனங்கள் நிற்கின்றன. 10 விநாடிகள்கூடுதலாக நிற்கும்படி சிக்னல் காட்டுகிறது என்றால் 100 X 10 = 1000 விநாடிகள் வீணாக்கப்படுகின்றன. வெறும் 1000 விநாடிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு வாகனத்திலும் நிறைய நபர்கள் இருப்பார்கள். சராசரியாக 5 நபர்கள் என வைப்போம். 5000 மனித விநாடிகள்.வாகனங்களின் எஞ்சின்களை நிறுத்தமாட்டார்கள். கணக்கீட்டில் சின்ன பிசிறு நடந்தால் மனித நேரம், எரிவாயு, சுற்றுச்சூழல் மாசு என எல்லா இடத்திலும் இது சேதப்படுத்தும்.
தேவையைவிட குறைவான நேரத்தை சிக்னலில் வைத்துவிட்டால் என்ன நிகழும்? மேலே போட்ட கணக்குதான். ஏனெனில் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரும். அப்போதும் நிறையச் சக்தி வீணடிக்கப்படும். மூன்று வகையான இடைவெளிகளைக் கொண்ட சிக்னல்கள் தற்சமயம் உள்ளன.
சீரானஇடைவெளி கொண்டவை, வாகன எண்ணிக்கை ஏற்ப மாறுபடுபவை (சென்சார்கள் மூலம் இயக்கப்படும்), மூன்றாவதாக ஒருங்கிணைக்கப்பட்ட இடைவெளி (நேரத்திற்கு ஏற்ப மாறுபடும் அல்லது தூரத்தில் இருந்தே இயக்கலாம்). உகந்த நேரம் (optimum time) என்பதைக் கணிதம் மூலம் அடையாளாம்.
வழக்கமாக எண்களை ஏறுவரிசையிலேயே எழுதியும் சொல்லியும் வருவோம். சிக்னலில் தான் தினசரி இறங்குவரிசையில் காணலாம். 10,9,8,7,6,5,4,3,2,1. இன்னும் எவ்வளவு விநாடிகள் காத்திருக்கலாம் என்பதை இது குறிக்கும்.
ஏன் சிவப்பு, மஞ்சள், பச்சை? சிக்னலில் மூன்று நிறங்களைக் காண்கின்றோம் அல்லவா?நில் என்பதற்கு ஏன் சிகப்பு நிறம்? பல நிறங்கள் உள்ளன அல்லவா? இதற்கு கணிதமும் அறிவியலும் காரணம். சிவப்பு நிறத்தில் அலைநீளம் மிக அதிகம். இதனால் எந்த சூழலிலும் சிகப்பு நிறத்தினைக் கண்கள் உணரும். இதுவே நீலம் அல்லது ஊதாவாக இருந்தால் கண்கள் சரியாக அதனை அடையாளம் காண முடியாது.
இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு மஞ்சள் = சிவப்பு பச்சை. இரண்டு நிறங்களையும் இணைத்தால் மஞ்சள் கிடைக்கும். வடிவங்கள், நிறங்களைக் கண்டுபிடித்தல், வரிசைப்படுத்தல் இவை எல்லாமே அடிப்படைத் திறன்கள். எவை ஒன்றின் பண்புகளை (நிறம், வடிவம், அளவு போன்றவை) ஆராய்வது கணிதத்தின் அடிப் படை.