Published : 12 Jan 2023 06:09 AM
Last Updated : 12 Jan 2023 06:09 AM

தூத்துக்குடி: மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பு வாகனம்

கோவில்பட்டியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் வீட்டில் இருந்து பள்ளி சென்று வர கேஆர் கல்வி நிறுவனம் வழங்கிய சிறப்பு வாகனம்.

தூத்துக்குடி: கோவில்பட்டியில் வித்யா பிரகாசம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சிறப்பு பள்ளியில் 52 மாணவ மாணவிகளும், ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் 30 பேரும் என மொத்தம் 82 பேர் படிக்கின்றனர்.

இங்கு பயிலும் குழந்தைகளை வீட்டிலிருந்து பள்ளிக்கும், மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கும் அழைத்துச் செல்வதற்கு வசதியாக வாகனம் இயக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோவில்பட்டி கே.ஆர்.கல்வி நிறுவனங்கள் சார்பில் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு வாகனம் வழங்கப்பட்டது. வாகன இயக்கத் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சிவசங்கரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஞா.ஐடா வரவேற்றார்.

கோட்டாட்சியர் கா.மகாலட்சுமி, வட்டாட்சியர் சுசீலா, ஊராட்சி ஒன்றியக் குழுதலைவர் கஸ்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மனநலம் குன்றிய மாணவர்களுக்கான வாகனத்தின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக மனநலம் குன்றிய மாணவ, மாணவிகள் தயார் செய்திருந்த கைவினை பொருட்களை பார்வையிட்டார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சுப்புலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் நாகராஜன், ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனர் தேன் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x