Published : 08 Sep 2022 06:25 AM
Last Updated : 08 Sep 2022 06:25 AM

திருப்பூர் | கரோனா பெருந்தொற்று காலத்தில் மலைக்கிராமத்தில் தங்கி பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு விருது

கரோனா ஊரடங்கின்போதும் மலைவாழ் கிராமத்தில் பாடம் நடத்திய ஆசிரியர் ஐயப்பன்.

திருப்பூர்: கரோனா பெருந்தொற்று காலத்தில் மலைக்கிராமத்தில் தங்கி பாடம் நடத்திய ஆசிரியருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஈசல்தட்டு செட்டில்மன்ட் பகுதியை சேர்ந்த லிங்கமாவூர் அரசுபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஐயப்பன் (வயது 37). இவருக்கு, தமிழக அரசின்நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் ஐயப்பன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 20 மாணவர்கள் படித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்ட எல்லை மட்டுமின்றி கேரள மாநிலத்துக்கும் எல்லையாக இருப்பதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வால்பாறை அட்டகட்டி, அய்யர்பாடி, குறுமலை, குழிப்பட்டி என பல்வேறு செட்டில்மென்ட் பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் இங்கு தங்கி படித்து வருகின்றனர்.

நல்லாசிரியர் விருதுடன் ஆசிரியர் ஐயப்பன்.

கரோனா பெருந்தொற்று பரவியதால், பள்ளிகள் மூடப்பட்டன. அந்த காலகட்டத்தில் போதிய மின்சாரம், செல்போன் உள்ளிட்ட வசதிகள் இல்லாத மலைக்கிராமத்துக்கு வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் சென்று, அங்கு குழந்தைகளுக்கு பாடம் நடத்தினேன். கரோனா காலம் முழுவதும் தொடர்ச்சியாக அங்கு தங்கிபாடம் எடுத்தேன். மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் எவ்வித தொய்வும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொண்டேன். இதுபோன்ற பணிக்காகதமிழக அரசின் நல்லாசிரியர் விருது எனக்கு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x