

மேட்டூர்: ஓமலூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாறுதலை கைவிடக்கோரி, அப்பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சிவகுமார் பணிபுரிந்து வந்தார். இப்பள்ளியில் பணியாற்றிய ரவீந்திரநாத் என்ற ஆசிரியருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வட்டாரக் கல்வி அலுவலர் ராஜேஷ் கண்ணன், தலைமை ஆசிரியர் சிவக்குமாரை, ஓமலூரை அடுத்துள்ள வாலதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்தார். வாலதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசித்ரா, வன்னியனூர் பள்ளிக்கு ஆகஸ்டு 26-ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் வாலதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசித்ராவின் பணியிட மாற்றத்தைக் கைவிட வலியுறுத்தி, அப்பள்ளியின் மாணவ, மாணவிகள் கடந்த 29-ல் வகுப்பை புறக்கணித்தனர். பள்ளி வளாகம் எதிரே திரண்ட அவர்கள், தலைமை ஆசிரியையை மீண்டும் தங்கள் பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என்று கோரி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர்.