Published : 26 Jul 2022 06:25 AM
Last Updated : 26 Jul 2022 06:25 AM

நீலகிரி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் நோட்டுகள்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுபள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு குறைந்த எண்ணிக்கையில் நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப் படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை நோட்டுகள் வழங்கப்படவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கிராமப்புறங்களை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் படிக்கின்றனர். இதுவரை அரசின் விலையில்லா நோட்டுகள் வழங்கப்படா ததால், மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சராசரியாக ஒரு மாணவருக்கு 12 நோட்டுகள் தேவைப்படும் நிலையில் தற்போது 4 நோட்டுகள் என்ற கணக்கின் அடிப்படையில் ஒவ்வொரு வகுப்புக்கும் குறைந்த நோட்டுகளே வழங்கப்பட்டுள்ளன. மேலும் பெரும்பாலான பள்ளிகளுக்கு நோட்டுகள் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

போதிய அளவு நோட்டுகள் வழங்கப்படாதது குறித்து அலுவலர்களிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, சென்னையிலிருந்து குறைந்த அளவு நோட்டுகள் மட்டுமே வந்திருப்பதாக பதிலளித்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, "அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் நேரில் சென்று வழங்கவேண்டும். மாணவர்களின் தேவைக்கேற்ப இதுவரை நோட்டுப் புத்தகங்கள் வரவில்லை.

பள்ளியில் பாடம்கற்பிக்கப்படும் நிலையில், மாணவர்கள் வீட்டுக்கு சென்று வீட்டு பாடங்கள் எழுத முடிவதில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x