

கோவை: தமிழ்நாடு தின விழாவையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் ஆ.புவனேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா, தமிழகத்துக்கு தமிழ்நாடுஎன பெயர் சூட்டிய ஜூலை 18-ம்தேதி, தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என அண்மையில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.
6-12-ம் வகுப்பு மாணவர்கள்
அதன்படி, கோவையில் தமிழ்நாடுதின விழா பேச்சு, கட்டுரைப் போட்டிகள் வரும் ஜூலை 6-ம் தேதி ராஜவீதியில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது. இதில் அரசு தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
முதல் பரிசு ரூ.10,000
தமிழ்நாடு உருவான வரலாறு,மொழிவாரி மாகாணம், தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள், தமிழ்நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சிசட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப் போர் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய 10 தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.