ராமநாதபுரம் குமரன் நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற மூலிகை திருவிழாவில் இடம்பெற்ற மூலிகை தாவரங்களை ஆர்வத்தோடு பார்வையிடும் மாணவிகள்.
ராமநாதபுரம் குமரன் நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற மூலிகை திருவிழாவில் இடம்பெற்ற மூலிகை தாவரங்களை ஆர்வத்தோடு பார்வையிடும் மாணவிகள்.

மூலிகை தாவரங்களை வளர்த்து பள்ளியை பசுமையாக்குங்கள்: மாணவர்களுக்கு சித்த மருத்துவ அதிகாரி அறிவுரை

Published on

பள்ளி வளாகத்தில் மூலிகை தாவரங்கள் வளர்த்து பசுமையாக்க வேண்டும் என்று ராமநாதபுரம் பள்ளியில் நடைபெற்ற மூலிகை திருவிழாவில் சித்த மருத்துவ அதிகாரி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

தேசிய ஆயுஷ் குழுமத்தின் வழிகாட்டுதலின்படி, பனைக்குளம் அரசு மருத்துவமனை, குமரன் தொன்மைப் பாதுகாப்பு மன்றம், நகர் அரிமாசங்கம் ஆகியவற்றின் சார்பில் மூலிகை திருவிழா ராமநாதபுரம் குமரன் நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ராஜா தலைமை தாங்கினர். மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் செயலாளர் உ.கோவிந்தராஜ் மூலிகைக் கண்காட்சியைத் திறந்துவைத்தார்.

பின்னர் நடந்த இளந்தளிர் முகாமில் மாவட்டசித்த மருத்துவ அலுவலர் கோ.புகழேந்தி அம்மா மகப்பேறு சஞ்சீவி பிரசுரத்தை வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கினார். பள்ளிவளாகத்தில் மூலிகைகள் உள்ளிட்ட தாவரங்களை வளர்த்து பசுமையாக்க வேண்டியதன் அவசியத்தை பனைக்குளம் அரசு மருத்துவமனை உதவி சித்த மருத்துவ அலுவலர் பா.ஸ்ரீமுகநாகலிங்கம் விளக்கினார். பள்ளி மாணவர்கள் பாரம்பரியத்தை சிறுவயதிலேயே அறிந்துகொண்டு பின்பற்றவேண்டும் என இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ரா.நடராஜன் கேட்டுக்கொண்டார்.

பாரம்பரியம் மற்றும் மருத்துவ முறைகள் பற்றி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாணவி வினிதா முதலிடமும், மாணவிகுணப்பிரியா இரண்டாமிடமும், பெற்றனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். தொன்மைப் பாதுகாப்பு மன்ற செயலர் மதிவாணன் நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in