

தேசிய அளவிலான கல்வி அறிவின் திருவிழாவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழகஆளுநர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திருச்சி தேசிய கல்லூரியில், தேசிய அளவிலான ஞான உற்சவ் எனப்படும் கல்வி அறிவின் திருவிழா நடைபெற்றது. விழாவில், தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டு, தங்கள்அறிவின் திறனை விளக்கும் வகையில் அவர்கள் உருவாக்கிய படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இதில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் சற்குணேஸ்வரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் அர்ச்சனா, அட்சயா, கோபிகா ஆகியோர் நவீன ஸ்மார்ட்போன் உலகத்தில், மனிதர்களிடம் கையெழுத்து பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருவதையும், கையெழுத்தின் அவசியத்தையும் விளக்கும் வகையில் உருவாக்கிய படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக ஆளுநர்பன்வாரிலால் புரோஹித், மாணவிகள் உருவாக்கிய கையெழுத்து தொடர் பான படைப்புகளை பார்வையிட்டு, அவர்களை பாராட்டினார். பின்னர், சிறந்த படைப்புகளுக்கான சான்றிதழை வழங்கினார்.
இப்போட்டிக்கு மாணவிகளுக்கு வழிகாட்டியாக அப்பள்ளியின் கணித ஆசிரியர் செந்தில்குமார், அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் ஆகியோர் செயல்பட்டனர்.
போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளையும், வழிகாட்டி ஆசிரியர்கள் செந்தில்குமார், முருகதாஸ் ஆகியோரையும் குடவாசல் வட்டார கல்வி அலுவலர்கள் இளங்கோவன், கலா, பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தி ஆகியோர் பாராட்டினர்.