

குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக்கி 75 வயது நிரம்பியதுப்புரவு பணியாளரை கவுரவித்துள்ளது சென்னை பெரம்பூர் கேஆர்எம் பொதுப்பள்ளி.
சென்னை பெரம்பூர் செம்பியம் சாந்திநகரில் அமைந்துள்ளது கேஆர்எம் பொதுப்பள்ளி. சிபிஎஸ்இபாடத்திட்டத்தின்கீழ் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அப்பள்ளியின் துப்புரவு பணியாளர் அமிர்தம் அம்மாள் தலைமை விருந்தினராக இருந்து தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் டி.பி.சிவசக்தி பாலன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்துமாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
குடியரசு தின விழாவில் துப்புரவு பணியாளர் ஒருவரை தலைமை விருந்தினராக்கி கவுரப்படுத்தியது குறித்துபள்ளியின் முதல்வர் சிவசக்திபால னிடம் கேட்டபோது, ‘‘75 வயது நிரம்பிய அமிர்தம் அம்மாள் எங்கள் பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
அவரது பணியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையிலும், அவரை கவுரவிக்கும் வகையிலும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கச் செய்தோம். கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில், இளம் விஞ்ஞானி விருது பெற்ற 8-ம் வகுப்பு மாணவர் கிர்த்திக் தலைமை விருந்தினராக பங்கேற்றார்’’ என்றார்.