

நாச்சிக்குப்பம் அரசு பள்ளியில் 5 நிமிடத்தில் 101 திருக்குறள் ஒப்புவித்த இரு மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் தனித்திறன் கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்கத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, கல்வி ஆய்வாளர் ஜெயராமன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியை விஜயா வரவேற்றார்.
காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சி முகாமில் பங்கேற்ற, நாச்சிக்குப்பம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.
மேலும், இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிவமணி, நவதீப் ஆகியோர் 5 நிமிடத்தில் 101 திருக்குறள், தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், நாட்டில் உள்ள மாநிலங்களின் பெயரை பிழையின்றி கூறி தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு பதக்கங்கள் அலுவலர்கள் வழங்கினர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சகாதேவன் செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் முனிசாமி நன்றி கூறினார்.